அப்போதும் அவள் கருவுற்றிருந்தாள்.
- லக்ஷ்மி சரவணகுமார்
- 7 days ago
- 2 min read

சென்னை புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் வீற்றிருக்கும் அருவி கருத்தரிப்பு மையத்தின்' தரைத்தளத்திற்கு கீழிருந்த பெரிய அறையில் பினோதினியும் மற்ற பனிரெண்டு பெண்களும் தங்களது மகப்பேறு நாட்களை கழித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பருவங்களில் பிரசவத்தை எதிர்நோக்கியிருந்தனர். அவர்களில் சிலருக்கு முன்பே ஓரிரு முறைகள் கருத்தரித்து குழந்தைகளை ஈன்று பெற்றோரிடத்தில் ஒப்படைத்த அனுபவமிருந்தது. அனுபவப்பட்டவர்களுக்கு புதிதாக வாடகைத்தாய் அவதாரமெடுத்திருக்கும்
பெண்களை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
பினோதினிக்கு இதுவே முதன்முறை. திருமணமாகி இருபது வருடங்களாகியும் குழந்தைப்பேறு வாய்க்காத ஒரு வங்காள தம்பதி தங்கள் குழந்தையை ஒரு வங்காள பெண்மணி கருத்தரித்து பெற்றுத்தர வேண்டுமென்று விரும்பியதால் ஏஜென்சியின் மூலமாக கொல்கத்தாவில் வசித்து வந்த பினோதினி அழைத்து வரப்பட்டாள். இந்த பரந்த தேசத்தின் எந்த புதிய நிலங்களையும் பார்த்து பழகியிராத பினோதினுக்கு சென்னைக்குச் செல்வதில் தயக்கமும் அச்சமுமிருந்தது. ஆனால் தனது மகள் முன்னியின் பொருட்டு அவள் இந்த புதிய வேலயை
ஏற்றுக்கொள்ளும் நெருக்கடியிலிருந்தாள். பிறந்தது முதலே முன்னிக்கு வலிப்பு நோயுண்டு. சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை சடாரென உடல் முறுக்கி கீழே விழுந்து வலியில் துடிப்பதைப் பார்க்க எந்த தாய்க்குத்தான் மனமொப்பும்.
அரசு மருத்துவமனைகள் இதை தங்களால் முழுமையாகக் குணப்படுத்த முடியாதென கைவிட்டபின், தனியார் மருத்துவமனைகளை நாடிச்சென்றாள். அவர்கள் கேட்ட பெருந்தொகைக்கு எங்கு செல்வதென்கிற குழப்பத்திலிருந்த போதுதான் இவளுக்கு பழக்கமான ஒரு பெண்ணின் மூலமாய் ஏஜென்ஸிக்காரன் வந்து சந்தித்தான். முன்னியின் மருத்துவத்திற்கு தேவையான மொத்தத் தொகையும்
கிடைத்து விடுமெனவும், சென்னையின் உயர்தர மருத்துவமனையில் அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்வதாகவும் ஏஜெண்ட் கூறினார்.
பினோதினி சென்னைக்கு கிளம்புவதற்கு முன் ராஜுவை ஒரு முறை சந்தித்து விட
எண்ணினாள். அவன் வேலை பார்த்த இடத்திற்கு முன்னியோடு சென்றாள். ராஜு நெகிழ்ந்து போனான்.
"சரி இந்த வாரம் லாரி லோடு ஏத்திட்டு வீட்டுக்கு வர்றேன்" என்று கூறி சில ரூபாய் நோட்டுகளை முன்னியன் பிஞ்சு விரல்களிடையே வைத்தான். தான் வந்த காரியத்தைச் சொல்லத் தடுமாறிய பினோதினி ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்னை செல்லவிருக்கும் தகவலைச் சொன்னாள்.
முன்னியின் மருத்துவ செலவுக்காக சென்னையிலிருக்கும் ஒரு பணக்கார தம்பதிக்கு வாடகைத்தாயாக செல்லப் போவதாக அவள் சொன்னபோது தாமதிக்காமல் ராஜூ
ஆர்வமாய்க் கேட்டான்.
"நெறைய பணம் கெடைக்குமா?"
"ஆமா அப்படித்தான் சொல்றாங்க, முன்னிக்கு ஏற்கனவே இந்த மாசத்துல ரெண்டு முறை வலிப்பு வந்துட்டுது"
"சரி சரி… நெறைய பணம் கெடைக்கும்னா வருசத்துக்கு ஒரு புள்ள பெத்துத் தரலாமே, நல்லா தெடமான ஒடம்புக்காரிதான் நீ "என்று ராஜூ சிரித்தான் . அந்த சிரிப்பிலிருந்த கள்ளத்தனத்தைப் புரிந்துகொண்ட பினோதினி கசப்போடு ஒரு
புன்னகையை உதிர்த்தாள்.
***
பினோதினியின் சின்னஞ்சிறு ஓவியங்கள் அவ்வறையின் சுவர்களை
ஆசுவாசப்படுத்தின. அவளுடன் தங்கியிருந்த பதிமூன்று பெண்களுக்கும் அந்த ஓவியங்கள் இளைப்பாறலை வழங்கின. அந்த ஓவியங்களின் அடர்த்தியும் இயல்பும் அவர்களை நெகிழச் செய்தன. குழந்தைகளின் முகங்களாய் நிரம்பியிருந்த ஓவியங்களில் மலைகளும், சூரியனும், ஆகாயமும், அருவியும் பிறந்து கொண்டேயிருந்தன.
"ஏன் எல்லா மனிதர்களுக்கும் குழந்தை முகம் வரைந்திருக்கிறாய்?"
ஒருமுறை வாடகைத்தாய்களில் மூத்தவளான கீதா கேட்டாள். பினோதினி பதில் சொல்லவில்லை.
மருத்துவமனை ஏஜென்ட்டுகளுடன் சேர்ந்து தனது சுற்றுப்புறத்திலுள்ள பெண்களை வாடகைத்தாயாக ஏற்பாடு செய்யும் வேலை செய்து வருபவள் கீதா. அதற்கு அவளுக்கு கமிஷன் கிடைத்தது. இப்போது கீதாவும் கருவுற்றிருந்தாள். அயல்நாட்டு தம்பதியினரின் குழந்தையை சுமக்கும் பெருமிதம்
அவள் முகத்தில் தெரிந்தது.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஒருமுறை அவர்களை பார்வையிட
வந்தபொழுது பினோதினியின் ஓவியங்களைக் கண்டு வெகுவாக பாராட்டினார். மாதத்திற்கு இரண்டு தடவைகள் கருவிற்கு சொந்தக்காரர்கள் அவர்களை சந்தித்து
தமது கருவின் ஆரோக்கியத்தை உறுதி செய்து சென்றனர். மருத்துவர்கள் உடனிருந்து அவர்களது சந்தேகங்களுக்கு விடையளித்தனர். ஒவ்வொரு
வாடகைத்தாயின் உடற்நலனையும் மனநலனையும் பேணும் வண்ணம்
மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். நேரந்தவறாமல் பழச்சாறு, அவித்த முட்டை, கீரை, பால் என்று சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. யோகப் பயிற்சி, தையல் வகுப்புகள், கதை வாசிப்பு நேரம் என்று அவர்களின் நேரத்தை செவ்வனே செலவழிக்கவும்
வழிவகைகள் செய்யப்பட்டிருந்தன.

பணம் படைத்தவர்களின் வேடிக்கையான செயல்களை நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பினோதினிக்கு, முன்னியை பிரசவித்த நாட்களின் நினைவுகள் வந்தன. இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனையின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துத்
தொங்கியபடி குழந்தையை வெளியேற்ற முயன்ற தருணங்களை நினைத்துப்
பார்த்தாள். வலியும் சோர்வும் கூடியதுதான் மிச்சம் குழந்தை வெளிவரவில்லை. "இது வெளிய வர்றதுக்குள்ள நீ செத்துருவ போல"என்று கூறிவிட்டு வெளியேறினான் பினோதியின் கணவன் ராஜு.
ஆனால் வெகுநேர போராட்டத்திற்குப் பின் கழிவறையில் சிறுநீர் கழிக்கும் பொழுது
வழுக்கிக் கொண்டு வெளியேறிய முன்னியை இரு கைகளில் ஏந்தியபடி அரை
மயக்கத்தில் நடந்து சென்று தூங்கிக் கொண்டிருந்த செவிலியை எழுப்பி அவள்
கைகளில் முன்னியைக் கொடுத்து விட்டு அருகிலிருந்த மரத்திண்ணையில் மயங்கிப் போனாள். பிறந்து அரை மணியாகியும் அழுதிராத முன்னியை பலவித அதிர்ச்சி முறைகள் செய்து அழ வைத்தனர் மருத்துவர்கள். முன்னி பிழைத்துக் கொண்டாள் என்ற பினோதியின் ஆறுதல் வெகுநேரம் நிலைக்கவில்லை. முன்னியின் பிஞ்சு உடல் மின்சாரம் பாய்ந்தது போல் பதறியது. வலிப்பு நோயின் அறிகுறியாக இருக்கக் கூடுமென்று எண்ணி இரண்டு வாரங்கள்
மருத்துவமனையிலேயே வைத்திருந்து அனுப்பினர்.
உயர் சிகிச்சைக்கு பணம் சேர்த்துக் கொண்டு வருமாறு மருத்துவர் பினோதினியிடம் கூறிய பொழுது பாதங்களின் கீழே பூமி நழுவுவது போல் தலை சுற்றியது. பச்சிளங்குழந்தைக்கு பாலும் சோறும் புகட்டவே திராணியில்லாத அவளுக்கு
முன்னியின் நோய் பெரிய விஷயமாக தோன்றவில்லை. "முன்னி முதலில் உணவருந்தி பிழைத்திருக்கட்டும் மற்றதை காளி தேவி பார்த்துக்
கொள்வாள்" என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.
மருத்துவமனையை விட்டு வெளியேறிய கணவன் ராஜு திரும்பி வரவேயில்லை. ராஜுவுக்கும், அவளுக்கும் வயது இருபத்தைந்திற்கும் அதிகமிருக்காது. தினக்கூலி வேலைக்குச் சென்ற இடத்தில் இருவருக்கும் பழக்கமேற்பட்டு கருவுற்றாள். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ராஜுவிற்கு வாழ்க்கைக் குறித்த பல திட்டங்கள் இருந்தன. உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் உதவியாளனாக சேர்ந்து படிப்படியாக முன்னேறி ஒரு பதவிக்கு வந்துவிட விரும்பியிருந்தான். பினோதினியோ முன்னியோ அவனது கனவு எல்லைக்குள் வர எப்போதும்
அனுமதித்ததில்லை.
"இந்தா இந்த ஜுஸ் குடி, புள்ளையோட அம்மா அப்பா பாத்துட்டிருக்காங்க"
என்று தாதி கொஞ்சம் சத்தமாக சொன்ன பொழுதுதான் பினோதினி
நிகழ்காலத்திற்குத் திரும்பினாள். அவர்களை சரியாக உணவு இடைவேளையின் பொழுது அழைத்து வரவேண்டுமென்று ஏஜென்டுகளுக்கு மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அவளும் முன்னியும் வாழ்ந்த உலகம் எப்போதும் அவளுக்கு போதுமானதாக இருந்தது. கட்டிட வேலையில் வந்த சொற்ப வருமானமும், சேலைகளில் ஓவியம் தீட்டி பெற்ற பணமும் அவளுக்கும் முன்னிக்கும் வாழத்
தேவையான நம்பிக்கையை தந்தன. அவளது ஓவியங்களைப் பார்த்து வியந்த அயல்நாட்டு பெண்ணொருத்தி,
"இவை சந்தால் இன பாரம்பரிய ஒவிய வகையைச் சார்ந்தது, இது எப்படி உனக்குத் தெரியும்” என பினோதினியிடம் கேட்டாள். அவ்வோவிய முறையை தனது பாட்டனாரின் கிராமத்தில் வாழ்ந்தபோது
கற்றதாகக் கூறினாள்.
அப்பெண்மணி நாடு திரும்பியதும் பினோதினிக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்
தருவதாக உறுதியளித்துச் சென்றாள். மனிதன் சந்திக்கும் பெருந்துயர்களில் கொடியது ஏதாவது ஒன்றிற்காக
காத்திருப்பதுதான். ஏன், எதற்காக,
யாருக்காக காத்திருக்கிறோம் என்று புரியாமல் காத்திரு என்று கட்டளையிட்டுக்
கடக்கும் காலத்திடம் என்னவென்று முறையிடுவது. பினோதினி காத்திருந்தாள்.
***
கொரோனா பெருந்தொற்று அயல்நாடுகளைக் கடந்து இந்தியாவில் பரவத் துவங்கிய நாட்களில் முன்னியுடன் சென்னை வந்து சேர்ந்தாள் பினோதினி. சென்னையில் வசித்த உறவினரின் பாதுகாப்பில் முன்னியை ஒப்படைத்து விட்டு
ஏஜென்ட்டுடன் 'அருவி கருத்தரிப்பு மையம்' வந்தாள். உறவினரும் தவறாமல் பணம் கிடைத்து விட வேண்டுமென்கிற நிபந்தனையின் பேரில் முன்னியை வைத்துக் கொள்ள சம்மதித்தனர். வாடகைத்தாயாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பான
உடற்பரிசோதனைகளெல்லாம் முடிந்து, கருவிற்கு சொந்தக்காரர்களின் மனம் சம்மதித்த பின் மருத்துவமனையின் ஒப்பந்தப்
படிவத்தில் கையெழுத்திட்டாள்.
நிபந்தனைகளை படித்துக் கொள்ளுங்கள் என்றார் ஏஜென்ட். பினோதினிக்கு அதைப்பற்றியெல்லாம் சிந்திக்க மனமில்லை. "முதல் தவணை பணம் எப்பொழுது கொடுப்பீர்கள்" என்றாள். "நாற்பத்தைந்து நாட்கள் முடிந்து கரு நிலைபெற்றுவிட்டதை உறுதி செய்தவுடன் முதல் தவணையை உங்களுக்கு கொடுத்து விடுவோம்" என்றார்.
"இதெல்லாம் முடிந்து நீயும் நானும் சீக்கிரமே வீடு திரும்புவோம் முன்னி" என்று நம்பிக்கையோடு கைகளில் வைத்திருந்த காளியின் புகைப்படத்தை
முத்தமிட்டாள். நாட்கள் வாரங்களாகின.
முன்னியின் நினைவுகளும் கருத்தரிப்பினால் ஏற்பட்ட உடல் மற்றும் மனரீதியான
மாற்றங்கள் பினோதினியை நலிவுறச்செய்தன.
பினோதினி தனது வயிற்றைத் தடவி சிலிர்த்துக்கொள்வதைப் பார்க்கையில்,
"இதெல்லாம் செய்யாத, மனசால நெனைக்க ஆரம்பிச்சுட்டா குழந்தைய அதோட அப்பா அம்மா வந்து தூக்கிட்டு போறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்" என கீதா எச்சரித்தாள். பினோதினியின் நெஞ்சு கனத்தது.
இரண்டாம் தவணை பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்திட்டதாக
அவளுக்கு நினைவில்லை. ஆனால் பணம் பெற்றுக்கொண்ட பட்டியலில் தன் பெயரிருப்பதைப் பார்த்தபொழுது
திடுக்கிட்டாள். கீதாவை அழைத்து விபரத்தைக் கூறினாள். சென்னையின் நம்பிக்கையான தலைசிறந்த கருத்தரிப்பு மையத்தில் இப்படியான முறைகேடுகள் நிகழ வாய்ப்பே இல்லை என்று கீதா சமாதானம் கூறினாள்.
"அப்படியென்றால் நான் வாங்கிய பணம் என்னிடம்தானே இருக்க வேண்டும். என்னிடம் பணமேதுமில்லையே” என்று அழுதாள். இரண்டு நாட்களுக்குப் பின்
" இங்க பாரு, இங்க இருக்குறவங்கலாம் சிரிக்க சிரிக்க பேசுனாலும் அவங்கள நம்ம
சொந்தகாரங்களா நெனச்சிரக் கூடாது. எல்லாரும் காசு வாங்கிட்டு வேலை செய்றோம். அத மறந்துராத. உன் உசுருக்கும் பொருளுக்கும் நீதான் பொறுப்பு. எந்நேரமும் படம் வரஞ்சிட்டிருக்க. உன் பொருள் மேல உடைமைகள் மேல கொஞ்சம் கூட கவனமில்லாம இருந்துட்டு இப்ப பணத்த வாங்கவே இல்லன்னு சொல்ற..." என்று கீதா கடிந்து கொண்டாள்.
முன்னியோ கண்ணெட்டும் தூரத்திற்கப்பால் இருக்கிறாள். ராஜு என்றொருவன் நினைவுகளிலிருந்து மறைந்தே போனான். இவ்வளவு தனிமையை இதற்குமுன் அனுபவித்திராத வலியில் பினோதினி
வெறுமை சூழ சுவற்றின் ஒரு மூலையில் பருந்துகள் வானில் வட்டமிடும்
ஓவியமொன்றை வரைந்தாள்.
பிற்பகல் நேரத்து சிற்றுண்டியாக அவித்த முளைக்கட்டின பயறு அனைவருக்கும்
விநியோகிக்கப் பட்டது. கிண்ணம் முழுவதும் புழுக்கள் நெளிவது போல் தோன்றியது.
அவளது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், கருவின் வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் குறையில்லை என்பதை உறுதி செய்து கொண்டு சென்றுவிட்டனர்.
பினோதினியை தட்டிக் கொடுத்து "வெரிகுட் நல்லா சாப்பிடுங்க" என்றார் உதவி மருத்துவர்.
"சார் போன தவணை பணம்....." என்று முனகினாள் பினோதினி.
“அதெல்லாம் உங்களை தவறாமல் வந்தடைந்து விடும். உங்கள் ஏஜென்ட்டை அனுப்புகிறோம். சந்தேகமேதுமிருந்தால் அவரை நீங்கள் கேட்கலாம்” என்று பதில் அளிக்கப்பட்டது.
கீதாவின்மூலமாக தலைமை ஏஜென்ட்டுக்கு பினோதினியின்
விஷயம் தெரிவிக்கப்பட்டது. ஏதாவது தவறு நடந்திருந்தாலும் பிள்ளைப்பேறு நிகழ்ந்து முடிந்து
வீடு திரும்பும் நேரத்தில் மொத்தத் தொகையும் மிச்சமின்றி தந்துவிடுவோம்
என்று மீண்டுமொரு உறுதியளிப்பு வந்து சேர்ந்தது.
“உங்களைப் போன்றோரின் சேவையால் எத்தனை குடும்பங்கள் இன்று
மகிழ்வுற்றிருக்கின்றன என்பதை மறவாதீர்கள். ஒருவகையில் நீங்கள் தேவதைகள் என்று கைக்கூப்பினார்” தலைமை ஏஜென்ட்.
***
ஆறுமாதம் நிறைவடைந்த பின் மருத்துவமனைக்குள்ளேயே
நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. முதன்முறையாக மருத்துவமனையின் பிரம்மாண்டத்தை கண்ட பினோதினி வியந்துபோனாள். பளீரிடும் விளக்குகளின் வெளிச்சம் பகல் நேரத்திலும் கண்ணைப் பறிக்க, சுவர்களெங்கும் புன்னகை பூக்கும் குழந்தைகளின் வண்ணப்படங்கள் தோன்றி மறைந்தன. "இன்று உலகெங்கும் அருவியின் குழந்தைகள்" என்று தலைமை மருத்துவர் பெருமிதமாக கூறி முடித்ததும் உலக வரைபடத்தில்
அருவியின் கருத்தரிப்பு மையத்தில் பிறந்த குழந்தைகள் வாழும் நாடுகள் டிஜிட்டல்
கோடுகளால் சுட்டிக்காட்டப்பட்டன.
அதைத்தொடர்ந்து மங்கள இசை முழங்க பெற்றோர்கள் மருத்துவமனைக்கு மலர் தூவி வணங்குவதாக காணொளி ஓடிக் கொண்டிருந்தது.
அந்த விளம்பரப்படம் மந்திர தந்திர படம் போலிருந்தது. பினோதினி நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினாள். கண்கள் மூடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். தனது சேலையொன்றை தரையில் விரித்து முன்னியை மனதில் நிறுத்தி
வரையத் துவங்கினாள்.
பெருமலையொன்றை வரைந்து, அதன் அடிவாரத்தில் தானும் முன்னியும்
சூரியோதயத்தைப் பார்த்திருப்பது போல வரைந்தாள். அந்த ஓவியத்திலும் தன்னை அவள் கருவுற்ற தோற்றத்தில் வரைந்திருந்தாள். ஓவியம் முழுமையடையும் நேரமாக, பினோதினியின் உறவினர் முன்னியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார். முன்னி பினோதினியை பிரிந்த துயர் தாளாமல் கதறியழ, தனக்குக் கொடுக்கப்பட்ட
இனிப்புகளைத் தந்து பினோதினி அவளைச் சமாதானப்படுத்தினாள்.
முன்னிக்கு நான்கைந்து முறைகள் வலிப்பு வந்ததாக உறவினர் கூறியதைக்
கேட்டபோது இவளுக்கு வேதனயில் கண்ணீர் முட்டியது. யாராவது கவனித்தால் எதுவும் சொல்வார்களென அவசரமாய்க்
கண்களைத் துடைத்துக் கொண்டாள். சந்திப்பு நேரம் முடிந்து விடைபெறுகையில் உறவினர் தனக்கான பணத்தைக் கேட்க, பினோதினி தன்னிடம் மிஞ்சியிருந்த தங்கக் காதணியை அவரிடம் கொடுத்து தான்
வரும்வரை முன்னியை கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி அனுப்பினாள்.
முன்னி பினோதினியின் வயிற்றைத் தொட்டு "இதுல அம்மாவோட பாப்பா இருக்கா" என்று ஆர்வமாக கேட்டாள்.
"ஆமா முன்னி. இந்த பாப்பா நமக்கு உதவி பண்ணுது, இன்னும் கொஞ்ச நாள்ல பாப்பா வந்துடும், அதுக்கு அப்பறம் வந்துருவேன்" என்று அவளுக்கு முத்தமிட்டு விடையளித்தாள்.
குழந்தைப்பேறுக்கான நாள் நெருங்கியதும் கருவிற்கு சொந்தமான
பெற்றோர் பினோதினியை அடிக்கடி வந்து சந்தித்தனர். பினோதினியின் பணம் ஏஜென்ட்டிடம் பத்திரமாக இருப்பதாக
அவளுக்குக் கூறப்பட்டது. குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டுமென
காளியிடம் வேண்டிக் கொண்டாள்.
நேராக படுத்தால் கொடி சுற்றிவிடும் அபாயம் ஏற்படுமென்பதால் ஒரு பக்கமாகவே
படுத்துறங்கினாள். கால்களில் நீர்க்கோர்த்து வலித்தது. சிறுநீர் முட்ட உறக்கம் அடிக்கடி கலைந்தெழுந்தாள். கருவறையில் குழந்தையின் அசைவுகளை துல்லியமாக உணர முடிந்தது. "துறுதுறுப்பான குழந்தை போல் தெரிகிறது" என்று வயிற்றைத் தடவினாள். "கவலைப்படாதே முன்னியைப் போலவே உன்னையும் கவனமாக பெற்றெடுப்பேன்" என்று அதன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொன்னாள்.
***
"நாளை அதிகாலை நல்ல நேரம் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆபரேஷன் செய்து விடலாம் "என்று பினோதினியை பரிசோதித்த தலைமை மருத்துவர் கூறினார். பினோதினி அதிர்ச்சியில் உறைந்தாள்.
"டாக்டர் ஆபரேஷன் எதுக்கு? நான் நார்மலாவே பெற்றுக்கொள்கிறேன். என்னால் முடியும். என் முதல் குழந்தையையும் அப்படித்தான் பெற்றேன்" என்றாள்.
"சாரிமா, பேரன்ட்ஸ் ஆபரேஷன் பண்ணி எடுத்துரலாம்னு சொல்றாங்க. நல்ல நேரம் பார்த்து எடுத்துரலாம். யோனி தோஷமேதும் பிள்ளைக்கு வந்துராம இருக்கணும்னு சொல்றாங்க".
"உடம்புல கத்தி பட வேணாமே டாக்டர், ஒருவேள சரியா வரலன்னா பெறகு ஆபரேஷன் பண்ணிக்கலாமே" பதைபதைத்துச் சொன்னாள் பினோதினி.
“இங்க பாரும்மா, இதெல்லாம் ஏற்கனவே ஒப்பந்தத்துல மென்ஷன் பண்ணிருந்தோம். கருவிற்குரிய பெற்றோர் எத்தகைய டெலிவரி எதிர்பாக்குறாங்களோ அத செஞ்சு
தருவோம்னு. நீயும் கையெழுத்துப் போட்டிருக்க" சற்று கடுமையாக பேசினார்கள்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்பொழுது பணம் பெறும் அவசரத்தில் வாசிக்காமல் கையெழுத்திட்டது எவ்வளவு பெரிய தவறென அவளுக்குப் புரிந்தது. ஒருபுறமாக திரும்பிப் படுத்துக்கொண்டு தலையின் பின்புறம் இரு கைகளையும் அழுந்தப் பிடித்துக் கொண்டே முழங்காலை முகம் தொடும்படியாக குவிந்து கொள்ள
சொன்னாள் செவிலி. அப்பொழுதுதான் முதுகுத்தண்டு நன்றாக எக்ஸ்போஸ் ஆகுமென்றாள். பினோதினிக்கு ஒன்றுமே புரியவில்லை. அடிவயிற்றில் வலி படரத்துவங்கியிருந்தது. அப்படியே விட்டால் சில மணிநேரங்களில் குழந்தை தானாகவே பிறந்து விடுமென்பது அவளுக்குத் தெரியும். ஆனால் ஒப்பந்தம் வேறொன்றை விரும்பியது. அமைதியாக கூனிக்குறுகி நிறைமாத வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்து குவிந்து
படுத்தாள். மயக்க மருந்து நிபுணர் தண்டு வடத்தில் மயக்க மருந்தை செலுத்தினார். பிள்ளைப்பேற்றின் வலி தண்டுவடத்தில் ஏறியது. பினோதினியின் உடல் சிறிது நேரத்தில் மரத்துப் போனது. அவளால் பார்க்க முடிந்தது பேச முடிந்தது ஆனால் உணர முடியவில்லை. எதையுமே உணர முடியவில்லை. திறந்தேயிருந்த அவளது கண்களை பச்சைத்துணிப் பட்டையால் கட்டி மறைத்தனர். பினோதினி உறங்கிப் போனாள்.
***
கண்விழித்த பொழுது அவள் மருத்துவமனையின் தனியறையொன்றில்
படுக்கவைக்கப்பட்டிருந்தாள். கைகால்களை அசைத்துப்பார்த்தபோது உடலில் வலி கூடுவதை உணர முடிந்தது. முதுகிலிருந்து கால்கள் வரை வலி. மெத்தை விரிப்பு உதிரப்போக்கினால் தளும்பிக் கிடந்தது. அன்று முழுவதும் அரை மயக்கம். அருகில் குழந்தையைக் காணவில்லை. ஒருவேளை சுத்தம் செய்து எடுத்து வருவார்களென எதிர்பார்த்திருந்தாள். யாரும் வரவில்லை. குழந்தையும் வரவில்லை. நேரம் மதியத்தைக் கடந்திருந்தது. சலைன் டியூப்பில் திரவம் ஏற்றப்பட்டது. பிறந்த குழந்தை ஆணா பெண்ணா, சிவப்பா கருப்பா, அழுததா அழவில்லையா, ஆரோக்கியமாக இருந்ததா என்று எதுவுமே தெரியாமல் பினோதினி தனக்குள் எழுந்து நின்ற வெறுமையை வெறித்துக் கொண்டிருந்தாள். அன்று மாலை செவிலியர் ஒருவர் வேகமாக அறைக்குள் வந்து, இயந்திரகதியில் சலைன் பாட்டிலை மாற்றினார், சிறுநீர் பையை சுத்தம் செய்து மீண்டும் டியூப்புடன் இணைத்தார். பினோதினியின் நாவரண்டு உதடுகள் ஒட்டியிருந்தன. துயரத்தின் மிகுதியில் அவள் ஊமையாகி விட்டது போலுணர்ந்தாள்.
"சிஸ்டர் குழந்தைய எப்ப காட்டுவீங்க “ என முனகலாய்க் கேட்டாள்.
“குழந்தைய பேரன்ட்ஸ் கிட்ட குடுத்தாச்சு. நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு சொல்லி எடுத்துட்டு போய்ட்டாங்க. உங்கிட்ட காட்டலாம்னு வந்தோம். நீ நல்லா தூங்கிட்டிருந்த. புன்யாஜனம் முடிஞ்சதும் ஒருநாள் உன்னைய வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு
போடணும்னு சொல்லிட்டு போனாங்க. எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருந்தாங்க." என்றாள் தாதி. மறுநாள் டியூப்கள் அனைத்தும் அகற்றப்பட்டு பினோதினிக்கு வாய்வழியாக
திரவ உணவு வழங்கப்பட்டது. சிஸேரியன் தையலை பரிசோதித்துவிட்டு "சீக்கிரம் ஆறிடும் டோன்ட் வொர்ரி" என்றார் மருத்துவர்.
"டாக்டர், தையல் நீளமா இருக்கே" என தயக்கத்தோடு கேட்டாள்.
"குழந்தை நல்லா கொழு கொழுன்னு அழகா குண்டா இருந்தான் அதான் கட் ஓபன்
பண்ண வேண்டியதா போச்சு" என்றார் மருத்துவர்.
கொழுகொழுவென்ற அழகிய ஆண் குழந்தை, விளம்பரங்களில் வருவது போல் கற்பனை செய்து பார்த்தாள்.
மருத்துவமனை விளம்பர காணொளியில் தான் சுமந்து ஈன்ற குழந்தையின்
முகமும் இனி இடம்பெறும். உலகின் ஏதோவொரு பகுதியில் தான் ஈன்ற குழந்தையிருப்பதாக டிஜிட்டல் கோடுகள் காட்டும் என்று நினைத்துப் பார்த்துக் கொண்டாள். மூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகலாமென மருத்துவர்கள் கூறியிருந்தனர். பினோதினிக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், குழந்தைப்பேற்றுக்கான மொத்தத் தொகை என அனைத்தும் சரிவர
கிடைக்குமென்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. முழுமையான ஓய்வெடுக்குமாறு கூறி ஏஜென்ட் அவளை
ஆட்டோவில் ஏற்றி அனுப்பினார்.
"சார் பணம் வாங்க எப்ப வரட்டும்" என்று வெறுமையாக கேட்டாள் பினோதினி.
ஒண்ணும் பயப்படாதேம்மா எல்லா ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சதும் நானே கீதா மூலமா
உன்ன வந்து பார்த்து பணத்தை குடுத்துருவேன். இவ்வளவு நாள் பொறுமையா இருந்த இன்னும் கொஞ்ச நாள் பொறுமையாயிரு. உடம்ப பாத்துக்க. உன் முகவரி, தொலைபேசி எண் எல்லாமே ஏஜென்சில பதிவாகிருக்கு. அடுத்து ஏதாவது வாய்ப்பு வந்தா தெரியப்படுத்துறோம். சரியா" புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார் ஏஜென்ட்.
மனிதனுக்கு நேரும் துயரங்களிலேயே பெருந்துயரம் காத்திருப்பதுதான். பினோதினி மீண்டும் காத்திருக்கத் துவங்கினாள். அன்றிரவு முன்னிக்கு சேலையில் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள். அதில் பெருமலையொன்று இருந்தது, முன்னி இருந்தாள், அவளும் இருந்தாள்.
அப்போதும் அவள் கருவுற்றிருந்தாள்.
* இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் வாசித்ததற்கான கட்டணம் செலுத்தலாம்.
குறைந்தபட்ச தொகை ரூ 200
9176891732 என்ற எண்ணுக்கு ஜீ பே வழியாகவோ அல்லது
Saravanakumar raja
Ac 268701001054
Icici bank
Chitlapakam branch
Ifsc code : ICIC0002687
இந்த வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.