top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

ஆவாராம் பூ



இலையுதிர் காலம் துவங்கிவிட்டதன் அடையாளமாய் மலையிலிருக்கும் மரங்கள் அவ்வளவும் கோடையை மறந்து பூக்கத் துவங்கியிருந்தன. “பொழுசாயம் ஆட்ட வெரசா ஓட்டிக் கொண்டாந்திருடா, நாளைக்குக் கொஞ்சத்த திண்டுக்கல் சந்தைல போயி வித்துட்டு வரனும்..” காலையில் கிடையிலிருந்து ஆடுகளைப் பத்தும் போது ராசகிட்ண கீதாரி சொன்னதை மனதில் வைத்துதான் பிற்பகலுக்குப் பின்பாக ஆடுகளை வேகமாக கிடையை நோக்கித் திருப்பினான்.


அடி வயிற்றிலிருந்து கிளம்பிய பசிக்கு, அவன் கைகள் தானாக ட்ரவுசர் பையில் சேமித்திருந்த ஆவாரம் பூக்களை தேடிச் சென்றது. வாடிய அந்தப் பூக்களை மெல்லும் போது நாவில் படர்ந்த லேசான கசப்பை மறக்கச் செய்திருந்தது பசி. ஆடுகள் கூட்டமாக ஒரே இடத்தில் மேய்ந்து கொண்டிருந்ததால் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் எழுப்பும் ஒலி அதீதமாய் எதிரொலித்தன. இவனோடு நன்கு பழகிவிட்டதால் பாதிக்கும் மேல் சொல்பேச்சுக் கேட்பதில்லை. “தா…. கத்திட்டு இருக்கேன் எரும மாதிரி நீ ஒரு பக்கமா போற… வெச்சு இழுத்தன்னா தெரியும்…” அவன் ஆவேசமாக கத்த கெடாய்க்குட்டிகள் தலையை ஆட்டியபடி பர்ர்ர்ர்ர் என சத்தமெழுப்பின. பக்கத்தில் கிடக்கும் மண் கட்டியைத் தூக்கி ஆட்டுக் கூட்டத்திற்குள் எரிந்தான். பயந்து ஓடுவது போல் போக்குக் காட்டிவிட்டு மலையை விடுத்து சரிவிலிருந்த புற்களை மேயத் துவங்கின.


ஆட்டின் கண்களுக்குள் கோடை தணிந்து போன நிம்மதியும் இளம் புற்களைக் கண்டு கொண்ட ஆர்வமும். அடிக்கொரு தரம் தனது இருப்பை உறுதி செய்து கொள்ளும் விதமாய் அப்பு “ஹேய்ய்ய்ய்ய் த்தர்ர்ர்ர்….” என சத்தமாக ஒலி எழுப்பினான். அந்த மலையின் செம்மண் சாலை முழுக்க அப்புவின் காலடித் தடங்களும் மேயும் ஆடுகளின் உதிர்ந்த ரோமங்களும் பரவிக் கிடக்கின்றன. உலகம் எத்தனை தூரம் முன்னே போனாலும் இந்த மலையும் மலைக்கிராமங்களும் முடிந்தவரை தங்களை அதற்குப் பின்னால் தான் வைத்திருக்கின்றன.


இங்கு கிடை ஓட்டி வருவதற்கு முன் சில மாதங்கள் சிதம்பரத்திற்கு அருகில் தான் ஆட்டுக்கிடை போட்டிருந்தார் ராசகிட்ணன். அங்கு கிடை போடத் துவங்கிய ஆரம்ப நாட்களில் மேய்ச்சலுக்கு பையன்கள் யாராவது இருந்தால் தேவலாம் என்றபோதுதான் ஏஜெண்ட் சொல்லி அப்புவை அவன் அய்யா கூட்டி வந்தார். பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் இருக்கும் சின்னதொரு கிராமம் அவனுக்கு. ஆறாம் வகுப்பு கூட முடித்திருக்கவில்லை, அப்புவின் அண்ணன் மூன்று வருட காண்ட்ராக்ட்டில் ஷிமோகாவில் கோழிப்பண்ணை வேலைக்கு அனுப்பப்பட்டு இரண்டு வருடமாகிவிட்டது. வறண்ட ஊரில் இனி வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்பதால் ஊரிலிருந்த எல்லோருமே ஏதோவொரு வகையில் இடம் பெயர்ந்து செல்லவே நினைத்தனர்.


சொந்த ஊர் குறித்த நினைவுகளையும் வயல்வெளிகளின் வாசனைகளையும் முந்திரிக் காட்டின் வெக்கையையும் வெகு சீக்கிரத்தில் எல்லோராலும் மறக்கவும் முடிந்தது. “வருசத்துக்கு பதினஞ்சாயிரம் தர்றேன். பயலுக்கு சாப்பாடு போட்டு வேணுங்கறத செய்றேன். பொங்க தீவாளின்னு வந்தா துணி மனி எடுத்துக் குடுத்துப் பாத்துக்கறேன். நம்ம கிட்ட இதுக்கு முன்னயே நெறைய பயக வேல பாத்திருக்காய்ங்க. அதனால நீங்க எதுக்கும் பயப்பட வேணாம்.” அப்பு பார்ப்பதற்கு ஆள் திருத்தமாக இருந்ததால் எப்படியும் அவனை வேலைக்கு சேர்த்துவிடுவதென ராசகிட்ணன் தீவிரமாய் இருந்தார். அப்புவின் அப்பாவிற்கு அந்தத் தொகை ஒரு ஆறுதலென்றால் அவன் வயித்துக்கு இனி பிரச்சனையில்லை என்கிற நிம்மதிதான் பிரதான சந்தோசம். ஆனாலும் அத்தனை எளிதில் பிள்ளையைப் பிரிந்து சென்றுவிட முடியவில்லை அவரால்.

“அய்யா சின்னப் பய, இதுக்கு முன்ன தூரந்தொல போனதில்ல. உங்கள நம்பித்தான் விட்டுட்டுப் போறேன். நல்லா படிக்கிற பய, வீட்டுக் கஷ்டம் வேற வழியில்லாம வேலைக்கு அனுப்பறேன்.” தவிப்போடு அவனை ராசகிட்ணனிடம் ஒப்படைக்கையில் அய்யா கடலூர் பஜாரில் வாங்கிய புது செருப்பை மகனுக்குக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.


ஆடுகளோடு அதற்கு முன்புவரையிலும் அவன் விளையாடியது கூட இல்லை. ஆட்டைப்பற்றி எதுவுமே தெரியாத அவனை நம்பி ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாதென்பதால் ராசகிட்ணன் தன்னோடே கூட்டிச் சென்றார். விருப்பமில்லாதபோதும் அவரோடு அலைந்து திரிந்தான். இதற்கு முன்னில்லாதபடி தன் மீது அளவுக்கதிகமாக ஆட்டின் வாசனை சேர்ந்திருந்ததால் அருவருப்பாயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஆடுகளோடு அதிக நேரம் அலையவிட்டு அவர் வேகமாய் அவனை மேய்ச்சலுக்குப் பழக்கினார்.


”நம்ம எம்புட்டுத் தூரத்துல இருந்தாலும் நாம குடுக்கற சத்தத்துக்கு மேஞ்சுட்டு இருக்க ஆடுங்க கட்டுப்பட்டு நிக்கனும். அப்பிடி நிக்கனும்னா அத உனக்குப் பழக்கற மாதிரி வித்தியாசமா ஏதாச்சும் சத்தம் குடுத்துப் பழக்கனும்.”


வெயிலுக்கு தலையைத் துண்டால் மறைத்திருந்த ராசகிட்ணன் அடித்தொண்டையிலிருந்து சத்தம் எழுப்ப, தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் ஒரு ஒழுங்கிற்குள் வந்ததைப் பார்த்தான். திரும்பி சிரித்துக் கொண்டவர் அவனுக்கும் அது மாதிரி சத்தம் எழுப்ப பழக்கினார். குழந்தைகள் விளையாட்டைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு மேய்ச்சலை கற்றுக் கொண்டவன் தனக்கு விருப்பமான வகையில் நீண்ட தொறட்டி ஒன்றைச் செய்து கொண்டு அதன் முனையில் அறுப்புக்கு வைத்திருக்கும் சின்ன அறுவாளும் கீழே இரண்டு மணிகளையும் கட்டிக்கொண்டான். தனது இருப்பை அந்த ஆடுகள் தனித்து உணரும் பொருட்டு அவ்வப்போது தொறட்டியை உயர்த்தி நன்றாக சத்தம் வரும்படி உலுக்குவான். தனித்து விடப்படும் பகல் பொழுதுகளில் தனக்குத் துணைவர்களாய் அந்த ஆடுகள் மட்டுமே இருப்பதால் மிக விரைவிலேயே அவற்றைத் தனது தோழர்களாய் நினைக்கத் துவங்கிவிட்டான். ஒடுங்கிச் சுருங்கின அவன் முகத்தில் பிரிவின் வேதனையை பிரதிபலிக்கும் ரேகைகள் விரிந்தோடி கிடக்கும். ராசகிட்ணன் இது மாதிரி நிறைய சிறுவர்களின் முகங்களைப் பார்த்தவரென்பதால் வலிந்து அவனிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை.


மேய்ச்சலை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது சோம்பலான வேலையாகத் தோன்றலாம். உண்மையில் அசாத்தியமான பொறுமையும் வலுவும் வேண்டும். ராசகிட்ண கீதாரி தன் பால்ய காலத்திலிருந்தே ஆடுகளுடன் அலைந்து திரிந்து வாழ்பவர். மேய்ச்சலை வாழ்நாள் தேர்வாகக் கொள்பவன் ஒரு நாடோடி, மண்ணும் மலையும் நீரும் ஆகாயமும் அவனுக்குத் துணை. அவையே தோழனும். இளையான்குடியில் அவருக்கு சொந்த வீடும், நிலங்களும் இல்லாமலில்லை. ஆனால் அவர் வாழ்க்கை ஆடுகளுக்கானவை. மேய்ச்சலின் காரணமாய் அலைந்து பழக்கப்பட்ட மனிதன், ’ஒரே இடத்தில் உட்கார்ந்து திண்பது தனக்கு சரிவராது’ என்பார்.


ஆடுகளோடு ஆடுகளாய் அலைந்து திரிவது மட்டுமல்ல அவை சரியாக மேய்கின்றனவா என்பதை பார்க்க வேண்டும். விஷ செடிகள் எதையும் தின்று விடாதபடி கவனமாக இருக்க வேண்டும். “காலைல பட்டியில இருந்து ஆட்டப் பத்தறதுக்கு முன்னால புழுக்கைய கையில அள்ளி கசக்கிப் பாக்கனும், ஈரமா இருந்துச்சுன்னா முந்தின நா குட்டி நல்லா மேஞ்சிருக்குன்னு அர்த்தம். இது எப்பவும் முக்கியம்.” முதல் நாள் பட்டியிலிருந்து ஆட்டை ஓட்டுவதற்கு முன்னால் அவர் சொல்லிக் கொடுத்ததிலிருந்து அப்பு தினமும் காலையில் கவனமாக பரிசோதிப்பான். ஊரிலிருந்து கிளம்பிய நாளிலிருந்து அவன் கடக்கும் எல்லா இடங்களிலும் இன்னும் ஊரின் அடையாளங்களைத் தேடுகிறவனாகத்தான் இருக்கிறான். புதிய நிலங்கள் பழைய வாழ்வின் ஜீவன் மிகுந்த நினைவுகளை அத்தனை எளிதில் மீறிச் சென்றிருக்கவில்லை.


வெளிச்சம் விலகி லேசான சாரல் விழத் துவங்கியபோது ஆடுகள் குளிருக்கு சலசலத்துக் கொண்டன. உடலை குலுக்கியபடி வேகமாக பட்டியை நோக்கி இறங்கின. சரிவிலிருந்து பார்க்கையில் தூரத்தில் ராசகிட்ணன் தனது குட்டிகளைக் கிடையை நோக்கி வேகப்படுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. இவனும் தலை மறைப்பிற்கு துண்டை போட்டுக்கொண்டு “ஏய்ய்ய்… த்ர்ரீ… ஓடுங்க ஓடுங்க,…” என பத்தினான். சமவெளியில் இறங்கிய சில நிமிடங்களில் இன்னொரு பக்கத்திலிருந்து ராமுவும் வந்து சேர்ந்து கொண்டார். ”ஏண்டா தம்பி இம்புட்டு பிந்திட்ட. மழ வர்றதாட்டம் தெரிஞ்சதுமே குட்டிய எறக்கி விட்றுக்க வேண்டியதுதான?” அப்பு தனது தொறட்டியை குட்டிகளுக்குள் ஒரு முறை நுழைத்து ஒரு கெடாக்குட்டியை மட்டும் உந்தித் தள்ளினான். அது துள்ளி ஓட, அதனோடு இருந்த மற்றக் குட்டிகளும் வேகமாக ஓடின. “குட்டிக சரியா மேயனும்ல சின்னய்யா அதான் பொறுத்துட்டு இருந்தேன். நாளைக்கு யாவரத்துக்கு வேற போறேன்னு சொன்னீக. நல்லா மேஞ்சாதான விடிகாலலைல வரைக்கும் தெம்பா இருக்கும்…” ராமு அவர் பக்கத்து ஆடுகளை வேகப்படுத்தினார். “மழையடிக்கிற அடிப்பப் பாத்தா காலைலைக்குப் போக முடியுமான்னு தெரியல… ஃபாரஸ்ட் ரேஞ்சர் வந்தானே எதும் கேட்டானா?” அவர்கள் இருவருக்கும் நடுவில் இப்பொழுது மழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தது. “இல்ல சின்னய்யா. ஆனா, வெள்ளாட்டங்குட்டி ஒன்னுமேல அந்தாளுக்கு கண்ணுன்னு நெனைக்கிறேன். முந்தியே ரெண்டு தரம் வரும் போது, நல்ல சுத்தமான வெள்ளாட்டங்கறி திண்ணு நாளாயிப் போச்சுடா தம்பி… உன் கீதாரி கிட்ட சொல்லி வெய்யின்னு சொன்னான்.” ராமு சத்தமாக சிரித்தார். “சரியான எச்சக்கல பயக.. உழச்சு சாப்டறவனுக்குத் தாண்டா அப்பு ஒரு வீட்டுச் சோறு. இந்த மாதிரி புடுங்கித் திங்கிறவனுக்கெல்லாம் தெனம் ஒரு வீட்டுச் சோறு. எதுக்கும் அவங்கிட்ட சாக்ரதையா இரு. வம்பு வளக்கனும்ணே குட்டியத் தூக்கிட்டுப் போவான்.” பேசியபடியே அவர்கள் கிடைக்குப் பக்கமாக வந்துவிட்டிருந்தனர். அவர்களுக்கு முன்பாக குட்டிகளை பட்டியில் அடைத்துக் கொண்டிருந்த ராசகிட்ணன் இவர்களின் ஆடுகள் போட்ட சத்தம் கேட்டு டார்ச் அடித்தபடி திரும்பிப் பார்த்தார். ராமுவும், அப்புவும் தங்களுக்கென இருந்த தனித்தனி பட்டிகளில் குட்டிகளைப் பத்திக் கொண்டிருந்தனர்.


”நாம ஆடு மேய்க்கிறதுக்குன்னே மொறையா அனுமதி வாங்கியிருக்கோம். ரசீதும் இருக்கு. அப்பறம் ஏன் சின்னய்யா இந்தக் காட்டாபிசருங்க நடுநடுவுல வந்து துட்டு கேக்கறாங்க.” அப்பு ராமுவைக் கூப்பிட்டு சத்தமாகக் கேட்டான். ராமு குட்டிகளை பட்டிக்குள் பத்துகிற அவசரத்தில் உடனடியாக அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் போக ராசகிட்ணன் சிரித்தபடி “ஏலே அப்பு இதெல்லாம் காலங்காலமா இருக்கறது. நம்மளுக்கு முன்னால வந்த யாரும் காரணம் கேக்கல… நாம போயி இப்ப காரணம் கேட்டம்னா நாளைக்கே இங்க இருந்து கெடைய மாத்திட்டு வேற ஊருக்குப் போக வேண்டியதுதான். ”என்னவோ கீதாரி… நாம வெயில் மழைன்னு இப்பிடி கஷ்டப்படறோம். அவனுங்க நோகாம திங்கறானுங்க.” அப்பு மழையினூடாக பட்டியை வேகமாக சுற்றிக் கொண்டு வந்தான். ராமுவும், ராசகிட்ணனும் தங்கள் ஆடுகளை பட்டிக்குள் அடைத்துவிட்டதால் வேகமாக குடிலை நோக்கித் திரும்பினர். இவன் மட்டும் கிடையை சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராசகிட்ணன் “என்னடா ஆச்சு?” சத்தம் போட்டுக் கூப்பிட்டார். மழைக்கு அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பதில் சொல்லாமல் சுற்றியவன் இன்னொரு முறை அவர் சத்தம் போட்டுக் கூப்பிடவும் “நெறமாசமா இருந்த வெள்ளாடு ஒன்னு கொறையுது கீதாரி. மழ வர்றதுக்கு முன்னால வரைக்கும் அதப் பாத்தேன். இப்பக் காணாம்.” அவன் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே ராசகிட்ணனும் ராமுவும் வேகமாக ஓடிவந்தார்கள். ராசகிட்ணன் கிடைக்குள் இறங்கி கண்களை அலையவிட்டபடியே ”என்னடா சொல்ற? சரியா பாத்தியா?” என சத்தமாகக் கேட்டார். “நல்ல பாத்துட்டேன்.” அவர் கிடைக்குள்ளிருந்து வெளியில் வரவில்லை. “சரி நீ மழைல நிக்காம போயி தலையைத் துவட்டிட்டு துணிய மாத்து, நான் வர்றேன்.” தன் பங்குக்கு அவர் கிடைக்குள் தேட, அப்பு அங்கிருந்து நகராமல் அப்படியே நின்றான். “இல்ல கீதாரி, எனக்கென்னவோ மலையவிட்டு இறங்கறப்பயே அது குட்டி ஈண்டுருக்கும்னு நெனைக்கிறேன். அதான் பள்ளத்துல எங்கயாச்சும் ஒதுங்கி இருக்கும். நான் ஒரு நட போயி பாத்துட்டு வர்றேன்.” குளிருக்கு அவன் குரல் நடுங்கியது. ராசகிட்ணன் தலையிலிருந்த துண்டை அவிழ்த்து தண்ணீரை நன்றாக பிழிந்தபடியே வந்தார். “கிறுக்கனாட்டம் பேசாத. மழையப் பாத்தயில்ல. எதுன்னாலும் காலைல பாத்துக்கலாம். நீ வந்து சாப்புட்டு படு.” அவர் அவனை கூடாரம் நோக்கி இழுத்துக் கொண்டு நடந்தார்.


அப்புவுக்கு மனம் சமாதானமாகவில்லை. பாவம் அந்த ஆடு. வலியில் திசை மிரண்டு போயிருக்கும். காலை வரை இந்த மழையில் தனியாக தாங்குமா என்பது சந்தேகம். ”இல்ல கீதாரி நான் போயி பாத்துட்டு வந்துடறேன். இங்க இருந்தாலும் மனசு நிம்மதி இல்லாம இருக்கும்.” அவன் பிடிவாதமாக நின்றான். ராமு அவன் தலையைத் துவட்டிவிட்டார். ”நீ பேசாம இரு… நான் போயி ஆட்டத் தேடிப் பாக்கறேன்.” அப்பு அவரிடமிருந்து துண்டை வாங்கித் துவட்டிக் கொண்டான். ”இல்ல சின்னய்யா உங்களுக்கு வழி தெரியாது. நான் வழக்கமா போற பாத தான. நான் போனா எப்பிடியும் ஒரு மணி நேரத்துல கண்டுபிடிச்சிருவேன். நீங்க இருங்க…” அப்பு ஓடிப்போய் கூடாரத்தில் செருகி வைத்திருந்த பாலித்தீன் கவரை எடுத்து தலையை நன்றாக மறைக்கும் படி போட்டுக் கொண்டான். ராசகிட்ணனின் கையிலிருந்து டார்ச்சை வாங்கியவன் வேகமாக மழைக்குள் இறங்கி தான் வந்த பாதையில் ஓடினான். பட்டியிலிருந்த குட்டிகள் மழையின் சத்தத்தையும் மீறி அவ்வப்போது சத்தமெழுப்பிக் கொண்டிருந்தன. மந்தையிலிருந்து விலகிப்போன ஒற்றை ஆட்டைத் தேடி எழுப்பின சத்தம்.


செம்மண் பாதை முழுக்க மழை நீரால் அடிக்கப்பட்டு கரைந்து சென்று கொண்டிருந்தது. டார்ச்சிலிருந்து கசிந்து நிறைந்த வெளிச்சத்தை மீறி நிறைந்திருந்தது இருள். நீண்ட நேரமாய் மழையில் நனைந்திருந்ததால் குளிரில் உடல் வெடவெடத்துப் போனான். பற்கள் தானாகவே அடித்துக் கொண்டன. இறுக கடித்துக் கொண்டு சமாளித்தான். மலைப்பாதை பகலில் இருந்ததைப் போல் இலகுவாக இல்லை. இருளான பள்ளங்கள் தோறும் நிதானமாக டார்ச் அடித்துத் தேடினான். மொத்தக் காடும் அந்த கனமழையை அமைதியாய் அனுமதித்து இருந்ததால் மழைச் சத்தத்தைத் தவிர்த்து வேறு சலனமில்லை. கால்கள் வலியில் பின்னிக் கொண்டுவிட ஒரு மரத்தில் சாய்ந்து நின்றான். நேரம் என்னவாயிருக்குமென கணிக்க முடியவில்லை. காலத்தை மீறி மழை மட்டுமே நிறைந்திருந்தது. மூச்சு வாங்கியது. ஒருவேளை ஆடு குட்டி ஈன்றிருக்கும் பட்சத்தில் இந்த மழைக்கு இரண்டையும் காப்பாற்ற முடியுமாவென கவலை.


அவன் நின்ற இடத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு பள்ளத்தின் பக்கமாய் முனகலான சத்தம் கேட்க வேகமாக அந்தப் பக்கம் டார்ச் வெளிச்சத்தைத் திருப்பினான். செடிகளுக்குள் உடலை மறைத்துக் கிடந்தது ஆடு. நீர் இறங்காமல் இருக்கும் படி பாதுகாப்பான சிறிய பள்ளம். போதாக்குறைக்கு சுற்றிலும் செடிகளும் மிகுந்திருந்தன. ஆட்டின் அனத்தலில் இருந்து ஒருவாறாக நிலமையைப் புரிந்துகொண்டு விட்டான். அந்தப் பள்ளத்தை நோக்கி சென்ற போது குளிர் தாங்காமல் நடுங்கிய ஆட்டின் உடலில் பிரசவத்தின் குருதியும் நீரும் சேர்ந்து படர்ந்திருந்ததைப் பார்த்தான். வேகமாக ஆட்டை நோக்கி ஓடினான். தனக்கு அருகில் ஆளரவம் கேட்கவும் பயந்து எழுந்து கொண்ட ஆடு தன் குட்டியை பாதுகாக்க வேண்டி இறுக மூடிக் கொண்டது. டார்ச் வெளிச்சம் ஆட்டின் மீது நிரம்பியிருந்ததால் எதிரில் வருகிற இவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை. வெளிச்சம் அருகில் நெருங்க ஆட்டின் அலறல் அதிகமானது. பதட்டத்தில் என்ன செய்கிறோமென்பது புரியாமல் அப்பு அப்படியே நின்றான். நிதானம் பிடிபட்டதும் டார்ச்சை அணைத்தான். நின்ற இடத்திலிருந்து அசையவில்லை. கால்களில் வந்த நிதானம் இன்னும் அவன் உடலுக்கு வந்திருக்கவில்லை. ஆடு நிதானமாகும் வரை அப்படியே காத்திருந்தான்.


அதீத வெளிச்சம் கண்ட அச்சத்தில் அடி வயிற்றிலிருந்து அலறிய ஆடு இப்பொழுது பழைய நிலை வந்ததும் சத்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது. இன்னும் முழுமையாக சந்தேகம் விலகியிருக்காததால் இடைவெளி விட்டு விட்டு சத்தம் போட்டது. ”ஏய் த்த்ரீரீரீ…. கழுத எதுக்கு கத்தற… நாந்தேன்…” சத்தம் போட்டுக் கத்தினான். அவன் குரலை உள்வாங்கி ஆடு வேகமாக எழுந்து நின்றது. மெதுவாக ஆட்டை நெருங்கிப் போனான். ஆடு இப்பொழுது நீண்ட நேரம் தேக்கி வைத்த வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாய் அனத்தியது. “கிறுக்குக் கழுத…. மந்தையோட நகந்து வராம இங்கன கெடந்து கத்திட்டு இருக்க. வந்து நாலு இழுப்பு இழுக்கறேன்.” மெதுவாக ஆட்டின் அருகில் சென்று முதுகைத் தடவிக் கொடுத்தான். அதன் அனத்தல் இப்பொழுது கொஞ்சமாய் குறைந்தது. டார்ச் வெளிச்சத்தை அவர்கள் இருக்கும் திசைக்கு சற்றுத்தள்ளி பாய்ச்சினான். அந்த இடத்தின் நிலமையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஆட்டிற்கு அருகில் உட்கார்ந்தவன் அதன் கால்களுக்கு நடுவே கிடந்த குட்டியைத் தொட்டுப் பார்த்தான். உயிர் இருப்பதற்கு அடையாளமாய் வேகமாக மூச்சு வாங்கியதில் வயிறு ஏறி இறங்கியது. அதன் உடலை மிருதுவாக வருடிக் கொடுத்தான். மனித உடலின் கதகதப்பிற்கு குட்டியின் உடல் மென்மையாய் சிலிர்த்தது. இடுப்பிலிருந்த தொறட்டிக் கத்தியை எடுத்து தாய் ஆட்டோடு சேர்ந்திருந்த தொப்புள்கொடியை கவனமாக அறுத்தெரிந்தான். தனது பாரம் நீங்கிய நிம்மதியில் நீண்ட பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டிருந்தது ஆடு.

உலர்த்தப்பட்ட துண்டிற்குள் வைத்து உறங்கிய குட்டியைக் கையில் எடுத்துக் கொண்டவன் ஆட்டை அந்தப் பள்ளத்திலிருந்து வெளியே பத்தினான். குருதிக்கறைகள் மழை நீரால் இன்னும் முழுமையாக கழுவப்படவில்லை. மணலும் சகதியும் கலந்து ஆட்டின் உடலில் வினோதமான வாசனை. பிரசவ வேதனையை மறந்து வேகமாய் சரிவை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது ஆடு. கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டிருந்த மழைக்கு இசைந்து கொடுத்துக் கொண்டிருந்த காட்டின் அத்தனை இயக்கங்களையும் மீறிப் பெருகி நிறைந்தது அந்த ஆட்டின் பிரசவ வாசனை. பிறந்த ஒரு உயிரை இத்தனை நெருக்கமாய் முதல் முறையாக கையில் எடுத்துக் கொண்ட பூரிப்பு அப்புவிற்கு. கிடையை நோக்கி வேகவேகமாய் நடந்தான்.


கூடாரத்தில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கிடையைக் கண்டுவிட்ட ஆடு உற்சாகத்தில் சத்தமாக கத்த, ஆட்டின் சத்தம் கேட்டு கிடையிலிருந்து மற்ற ஆடுகளும் பதில் குரல் எழுப்பின. ராசகிட்ணனும், ராமுவும் வேகமாக ஆடு வந்த திசையில் ஓடிவந்தனர்.”அப்பு உனக்கு ஒன்னுமில்லையேடா…” ராமுதான் முதல் சத்தம் கொடுத்தார். ‘’அதெல்லாம் ஒன்னுமில்ல சின்னய்யா…” கையில் பிறந்த குட்டியுடன் நடந்து வந்த அப்புவின் முகத்தில் களைப்பை மீறின சந்தோசம். ராசகிட்ணன் குட்டியைக் கையில் வாங்கிப் பார்த்தார். நேர்த்தியான வெள்ளாட்டங் குட்டி. “எங்கனடா கெடந்துச்சுக ரெண்டும்.?” அப்பு உடலில் வழிந்த நீரை துடைத்தபடியே “கடைசியா இருட்ட முந்தி ஒரு மேட்டுல மந்தைய மேய விட்றுந்தேன் கீதாரி. இது மட்டும் அங்கயே படுத்துக்கிருச்சு போல. நல்ல வேள பூச்சி பட்ட எதும் இல்ல…” நடுங்கியபடி நின்ற அப்புவின் முகத்தில் இன்னும் சிரிப்பு அகன்றிருக்கவில்லை. ”மொதல்ல துணிய மாத்திட்டு சாப்புடு. பெறகு பேசிக்கலாம்.” ராமு அவனை தன்னோடு அணைத்துக் கொண்டு கூடாரத்தை நோக்கி கூட்டிக் கொண்டு போனார். தலையைத் துவட்டி வேறு உடை அணிந்தபோது அவ்வளவு நேர ஈரத்தையும் மீறி கொதித்தது அவனுடல். கயிற்றுக்கட்டிலில் ஒன்றுக்கு இரண்டாய் போர்வைகளை விரித்திருந்தனர். ராசகிட்ணன் தட்டில் சாப்பாட்டை எடுத்து வந்து கொடுக்க, மறந்து போயிருந்த பசி நினைவுக்கு வந்து அப்புவின் கைகள் பரபரத்தன. வேகவேகமாக சாப்பிட்டு முடித்தான். ”சந்தைக்கி நான் இன்னொரு நா போயிக்கறேன். நீ நல்லாத் தூங்கி காலைல சாவகாசமா எந்திரி.” ராசகிட்ணன் அவன் தலையனையை சரியாகப் போட்டுவிட்டு பக்கத்து கூடாரத்திற்குப் போனார். அப்பு சரியெனத் தலையாட்டிக் கொண்டான். அசதியில் உறக்கம் மேலிட்டது. ஆனாலும் படுத்துக் கொள்ளாமல் கால்களை நீட்டி கட்டிலில் உட்கார்ந்தபடி பட்டியையேப் பார்த்துக் கொண்டிருந்தான். இருளில் இப்பொழுது மழை ஓய்ந்த அந்த இடம் நீண்ட அமைதியில் கிடந்தது.

இன்னும் விடிந்திருக்கவில்லை. ஃபாரஸ்ட் ஜீப் கூடாரத்திற்கு அருகில் வந்து ஹாரன் அடித்த சத்தம் கேட்டு ராசகிட்ணன் பதறி வெளியே வந்தார்.


ரேஞ்சர் வேகமாக வந்து “யோவ் கீதாரி சீக்கிரமா வா இங்க….” பாதித் தூக்கத்தில் பதட்டம் விலகாமல் வந்து நின்ற ராசகிட்ணனின் முகத்தில் அச்சம். அருகில் வந்ததும் ரேஞ்சர் பளாரென ஒரு அறைவிட்டான். “அறிவில்ல உனக்கெல்லாம். மேச்சலுக்கு சின்னப் பயகல கூட்டியாரலாமாய்யா…?” கீதாரிக்கு நிலமை எதுவும் பிடிபடவில்லை. அவர் தடுமாறி நிற்க, சத்தம் கேட்டு ராமுவும் ஓடிவந்துவிட்டார். “என்னாச்சுங்கய்யா… எதும் வில்லங்கமா?” ராசகிட்ணனுக்கு வார்த்தைகள் தடுமாறின.

“வில்லங்கம்மா? பச்சப்பயல அடாத மழைல அலைய விட்றுக்கீக… காட்டுக்குள்ள வந்தவன் வழி தெரியாம பள்ளத்துல விழுந்து செத்துப் போனான்யா… லாரிக்காரன் ஒருத்தன் பாத்துட்டு எனக்கு ஃபோன் பன்னினான்.” ராசகிட்ணனுக்கு உடல் வெலவெலத்தது.

“என்னய்யா சொல்றீக? அவந்தான் எப்பவோ வந்து சாப்புட்டு படுத்துட்டானே…” ரேஞ்சருக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் கோவம் அதிகமாக இன்னொரு அறை விட்டார்.

“ஏண்டா நான் என்ன சொல்லிக்கிருக்கேன், நீ தனியா ஒரு கத சொல்லிக்கிருக்க…” ராமு அவரை விலக்கிவிட்டு வேகமாக முன்னால் வந்து “அய்யா பொய்யா நெசமான்னு நீங்களே வந்து கூடாரத்துல பாருங்க…” ஆவேசமாக கத்தினான். ரேஞ்சர் திரும்பி ஜீப்பிற்குப் போனான். அவனுடன் இருந்த காவலரும் அவனுமாக சேர்ந்து இப்பொழுது அப்புவைத் தூக்கிக் கொண்டு வந்தனர். பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் இருவருக்கும் அச்சத்தில் உடல் நடுங்கியது. ராசகிட்ணனுக்கு நடந்தது இன்னும் முழுமையாக விலகியிருக்கவில்லை. ரேஞ்சர் தூக்கி வருவதும் சந்தேகமில்லாமல் அப்புதான். வேகமாக ஓடிப்போய் அப்பு படுத்தக் கூடாரத்தைப் பார்த்தார். போர்வை அலுங்காமல் விரித்தபடி அப்படியே இருந்தது. கட்டிலைத் தொட்டுத் தடவிப் பார்த்தார். அங்கு ஒரு ஆள் இருந்ததற்கான எந்த அடையாளங்களுமில்லை. ஆனால் வினோதமான ஒரு வாசனை மட்டும் கட்டிலில் இருந்து மூர்க்கமாக கசிந்து கொண்டிருந்தது. சடாரென பிடிபடவில்லை. ஆழமாக மூச்சை உள்ளிழுத்துப் பார்த்தார். ஆவாரம் பூக்களின் வாசனை.


303 views

Recent Posts

See All

Fake

bottom of page