top of page

இரண்டு கவிதைகள் - லஷ்மி சரவணகுமார்

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • Sep 7, 2023
  • 1 min read

கல்வீட்டில் துவங்கும் இசை…



ree


கனவுகள் கொலையுண்டதொரு தினத்தில்

செழித்த பூனையின்

வாளிப்பான குரலில் பாடத்துவங்கினாய்

மதுவின் வீரியத்துடனும்

பூக்களின் வசீகரத்துடனும்

கசிந்த குரலில்

சிலிர்ப்புறுகின்றன மரங்கள்

யாரிடமும் சொல்லப்படாத

ஈரமிக்கப் பக்கங்களில்

உன் சொற்களை எழுதிச்செல்கிறது காற்று

இயல்பாய் உடைந்து நொறுங்குகிற

குடுவையொன்றிற்கான அவகாசமுமின்றி

துரத்தியபடியிருக்கும் கண்களில்

மூர்க்கமான விருப்பத்துடன் நிழலாடிக்கொண்டிருக்கும்

உன்னுடல்

இவ்வீட்டுப்பெண்களின் உடல்களில்

முத்தங்களின் சடங்குகளைத் தவிர

வேறொன்றும் மிச்சமில்லை

ரோம்நகர தேவதைகளின் சாயலையொத்த

உன் அம்மாவிற்கு

பசும் இலைகள் விரிந்த நெகிழும் வீதியில்

சிறியதொரு மரவீடும்

கொஞ்சம் மதுவின் போதையுடன்

கிதார் இசைக்கத் தெரிந்த கணவனும்

நிறைவேற்றிக்கொள்ளப்படாத ஆசைகள்தான்

விடுபடுதலை மட்டுமே கொண்டாடிய

உன்னிசை

யாவர்க்கும் பிடித்தமாகையில் நீ

பெருங்கனவின் நீட்சியானாய்

தெளிந்த சாரல்பெய்த இம்மாலையில்

கட்டிமுடிக்கப்பட்ட

அரக்குவர்ண கல்வீட்டில்

விருப்பத்துடன் கிதார் இசைக்குமொருவன்

உனக்காகவென்றே ஓரிசையைத் துவக்குகிறான்.



silence of the palace என்னும் துனிசிய படத்தில் வரும் ALIA பாத்திரத்திற்கு.


( 2009 ம் வருடம் வெளியானது )



இன்னும் துவங்காத கதை....



ree


எல்லாக் காட்டிலிருக்கிற புலிகளும் இப்பொழுது உறங்கப்போயிருக்கின்றன

எனக்கு புலிகளை வைத்து கதை சொன்னவள்

இப்பொழுது தானுமொரு காட்டில் ஒளிந்திருக்கிறாள்

ஒரு கதை சொல்வதற்கு

எனக்குத் தேவையாயிருந்த அவள் சொற்களை

புலிகள் எப்பொழுதோ திருடியிருக்கின்றன

நான் இப்பொழுது ஒரு கதை சொல்லியே ஆகவேண்டும்

அல்லது கேட்க வேண்டும்

சொல்லவும் கேட்கவுமிருக்கும் ஓராயிரம் கதைகளை

இனி யார் எமக்கு சொல்லக்கூடும்

சூடான ஒரு குவளைத் தேநீரில்

கிடைத்து விடுகிற சந்தோசம்

ஒரு பொய் ஏற்படுத்தும் சில நிமிடங்களுக்கான சந்தோசம்

எல்லாமும் காலம் தன் கதைகளால் எனக்குச் சொன்னதுதான்

மெளனத்தின் விரல் பிடித்து கதை சொல்கிற கன்னிமார்கள்

இன்னும் இந்நிலத்தில் கதையாயிருக்கிறார்கள்

இப்பொழுது

அவர்களின் ஆத்மா எழும்பத் தவிக்கிறது பேரதிர்வுடன்

நீங்களோ நானோ

புலிகளை எழுப்ப வேண்டும்

அல்லது யாரோவொருவன் சொல்லப்படாத இன்னுமொரு கதையை

சொல்லத் துணியட்டும்....


( 2009 ம் வருடம் வெளியானது. )

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page