top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கம்பமத யானை. *





”எத்தனையளவு உள்ளே போகிறேனோ

அத்தனை பசுமை மலைகள்.”

டானடா சண்டூகா ( ஜென் கவிதைகள் ) – தமிழில் ஷங்கரராமசுப்பிரமணியன்.

           

 

கண்ணுக்கெட்டிய உயரம் வரை மலையை இருள் சூழ்ந்திருந்தது. பெளர்ணமி நிலவின்  வெளிச்சத்தை குடித்துக் கிறங்கிப் போயிருந்த மந்தமான இருள். வண்டாரி, பழையூ,செம்பட்டி, அத்திபட்டி ஊர்களிலிருந்து துணைக்கு வந்திருந்த ஆட்களுடன் செல்வராஜும் ஜோதியும் மலையிலிருந்து இறங்கிக்  கொண்டிருந்தார்கள். மஹாலிங்கத்தின் தரிசனத்திற்காக சாரை சாரையாய் மக்கள் தாணிப்பாறை வழியாய் வந்து  கொண்டிருந்தாலும் சாப்டூர் சுற்றின கிராமத்து மக்களுக்கு இன்னும் இதுதான் குறுக்குப் பாதை. தாணிப்பாறையிலிருந்து செல்வதை விடவும் தூரம் குறைவுதான், ஆனால் ஏறி இறங்கக் கடினம். நிமிர்ந்து கொஞ்சமும் வளைவற்ற மலையில் ஏறும் போது வியர்த்து மூச்சு வாங்கும். உடலின் சக்தியையெல்லாம் திரட்டி நடந்தால் பாதி வழியில் சமயங்களில் திசை மிரண்டு போகவும் கூடும். இறங்கும் போது உடல் ஒருநிலையில் இருக்காது. கீழ் நோக்கி வேகமாகத் தள்ளுவதால் தலைசுற்றி மயக்கம் வரும். அனுபவஸ்தர்கள் இல்லாமல் சென்றால் ஆபத்து. ஆனால் ஊர்க்காரர்களுக்கு இந்தப் பாதையின் ஒவ்வொரு அங்குலமும் பிடிபட்டுவிட்டிருந்ததால் கண்ணைக் கட்டிவிட்டாலும் போய் வந்துவிடுவார்கள். வழிகள் மனிதர்களுக்கு பழக்கத்தின் நீட்சி. 


விடிவதற்கான வெளிச்சம் வர இன்னும் அவகாசமிருந்தது. பழையூர் புளியந்தோப்பைத் தாண்டி ஓடையை நெருங்கியபோது மனித நடமாட்டம் கண்ட மயில்கள் இடைவெளியில்லாமல் அகவத் துவங்கின. கடந்த வாரம் பெய்திருந்த ஒற்றை மழையின் நீர்  இன்னும் ஓடையில் ஓடிக் கொண்டிருந்ததால் மெல்லியதாய் நீரின் சலசலப்பு. கருப்புதான் எல்லோருக்கும் வழிகாட்டியாய் முன்னால் சென்று கொண்டிருந்தான். காடும் மலையுமே கெதியென வாழ்ந்து பழகியவனுக்கு பெயருக்கேத்தது போல் உடம்பு. ஆனால் மினுங்கி ஒளிரும் அபூர்வமான கறுப்பு.


கையிலிருந்த டார்ச் விளக்கை அணைத்தவன் இருளினூடாக ஓடையின் சத்தத்தைக் கூர்ந்து கவனித்தான். யானையோ மானோ நரிகளோ நீர் அருந்தலாம் என்பது போல் சலசலப்பு. கருப்பு செல்வராஜின் தம்பி. காடும் இந்த ஊரும் போதுமென எந்த வேலைகளுக்கும் தன்னைப் பழக்கிக் கொள்ளாதவனுக்கு மதுரைக்கு அப்பால் ஊர்கள் இருக்கக் கூடுமென்கிற நம்பிக்கை  இல்லை. எப்போதாவது பழங்காநத்தத்தில் இருக்கும் செல்வராஜின் வீட்டிற்குப் போய் வருவதால் மதுரை கண்ணால் கண்ட சாட்சி.


காண முடியாத நிலங்கள் கதைகளில் மட்டுமே இயங்கக்கூடியவை என்று நம்புகிறவன்.

மலையிலிருந்து இறங்கியவர்களின் உடல் வியர்த்து மூச்சு இரைத்தபடியிருக்க, ஜோதி மட்டும் கொஞ்சமும் களைப்படையாதவளாய்த் தெரிந்தாள்.  நீண்டதூர மேய்ச்சலுக்கு பழக்கப்பட்ட காட்டுமாட்டைப் போல் யாரையும் சட்டை செய்யாமல் திமிறும் உடல். இந்த இருளில் அவளைப் பார்க்கையில் செல்வராஜுக்கு அச்சமாகக் கூட இருந்தது. சமீப நாட்களாக இருளில் அவள் அச்சத்திற்குரியவள். ”பொறுத்துப் போ மயினி, ஏன் வேக வேகமா நடக்கற?” வழி முழுக்க சொல்லியபடியே வந்த கருப்பின் பேச்சை அவள் சட்டை செய்யவே இல்லை.  இப்பொழுதும் ஓடையில் மிருக அசைவு கேட்ட நின்றிருந்தவர்களை விட்டுவிட்டு முன்னால் நடந்த ஜோதியை கருப்பு கையைப் பிடித்து நிறுத்தினான். ஜோதியின் கையில் பாதிகூட இல்லாத மெலிந்த அவன் கையில்  புரண்டிருந்த நரம்புகளின் வலு அவளை நிறுத்தப் போதுமானதாயில்லை.


“மயினி யான தண்ணி குடிக்குது. செத்த பொறு.”


காற்றின் ஓசையை தொந்தரவு செய்யாத மெல்லிய சத்தத்தில் சொல்லியவனைப் பார்த்துச் சிரித்தவள், “தெரியும் கருப்பு அதான் போறேன்.” தொடர்ந்து நடந்தாள். உடன் வந்திருந்த ஆட்களுக்கெல்லாம் சங்கடம், தொடர்ந்து செல்லவும் பயம். “அவள விட்றா, அடங்காப்பிடாரி முண்ட. சொன்னா கேக்க மாட்டா.” ஜோதிக்கு கேட்காத சத்தத்தில் செல்வராஜ் முனகினான். பழையூரின் காட்டுப் பகுதியில் முனி நாட்டம் அதிகமாகி இருப்பதான அச்சம் சுற்றி இருக்கும் ஊர்களுக்கெல்லாம் பரவியிருந்தது. உயிர் பலியெடுக்கக் கூடுமென்று எல்லோரும் நம்பினர். இரவில் தனித்து அலைகிறவர்கள் மீது முனி பெருநாட்டம் கொள்ளும். மரங்களின் அசைவும் இலைகளின் சலசலப்பும் முனிகளின் ஜடாமுடிகளாய் ஒருபுறம் அச்சுறுத்த, அசையும் யானையாய் இருளில் நளினமாக நடந்து சென்ற ஜோதி முனியின் உயிர்சாட்சியாய்த் தெரிந்தாள் அவர்களுக்கு.

                                                

             2

வேழம்


ஜோதியின் கணவன் என்பதைத் தாண்டி சுவராஸ்யமாக சொல்வதற்கு செல்வராஜைக் குறித்து எதுவுமில்லை. சுமாராக படித்து சரியான வயதில் சுமாரானதொரு வேலைக்கும் சென்றுவிட்டவனுக்கு அவள் நெருங்கிய உறவு. தன்னை விடவும் நான்கு இஞ்ச் உயரம் அதிகமிருந்தும் அவளையே திருமணம் செய்து கொள்ளவேண்டுமென பிடிவாதமாய் இருந்தான்.   செல்வராஜ் அவளைப் பார்க்கும் போதெல்லாம் பேரிளம் பருவத்திலிருக்கும் பெண்ணொருத்தியின் மீது கொள்ளும் கைக்கிளைக் காதல் கொண்டவனின் தவிப்பையே உணர்வான். இப்பொழுதும் கூட அவளுடன் கூடுகிற பொழுதுகளில் பதின் பருவத்து இளைஞனிடம் காணப்படும் பதட்டமே வெளிப்படும். கலெக்டர் அலுவலகத்தில்  தனக்கிருந்த பாதுகாப்பான வேலை காரணமாகவும், அவள் மீது எந்தவிதத்திலும் உடல் ரீதியான வன்முறையை பிரயோகிக்கும் தைரியமற்றவன் என்ற நம்பிக்கையிலுமே அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்ள தயங்காமல் ஒப்புக் கொண்டாள் என்பதை இவன் நன்கு புரிந்து வைத்திருந்தான். 


இன்னும் வெளி உலகின் புழக்கங்களுக்கு அதிகம் பழகாத சாப்டூரிலிருந்து மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்ற முதல் ஆள் இவன். ஒரு அக்கா ஒரு தம்பியென பெரிய குடும்பம். அத்திபட்டி போகும் வழியில் பத்துப் பதினைந்து ஏக்கர் வயலும், ஓடைக்கு முன்பாக மலையைப் பார்த்துச் செல்லும் பாதையில் தென்னந் தோப்புமாய் வருமானத்திற்கு குறைவில்லாத சொத்து. எத்தனை கடுமையான கோடையிலும் கூட நீர்வரத்து குறைந்து விவசாயம் நொடித்துப் போகும் நிலையில்லாமல் செழித்த ஊர்.


சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே மலையிலிருந்து இறங்கி வரும் இந்தக் காற்றிற்கு பழக்கப்பட்ட ஒருவனுக்கு  இந்த ஊரைவிட்டுச் செல்லும் மனம் வராது. உடலின் அத்தனை நரம்புகளுக்குள்ளும் புகுந்து சென்று  கிளர்த்தும் தனித்துவம் அந்த காற்றுக்குண்டு. முதல் சில மாதங்கள் ஊரிலிருந்துதான் வேலைக்குப் போய் வந்தான். ”இம்புட்டுத் தூரம் தெனம் அலைஞ்சா உடம்பு கெட்டுப் போயிரும்டா. பேசாம மதுரைலயே ஒரு வீடப் பாரு.” என அவன் அய்யாதான் எடுத்துச் சொன்னார். செல்வராஜ் ஊரிலிருந்து விலகி இருக்க தயங்கியதற்கான இன்னொரு காரணம் , தம்பி கருப்பு.  மனம் போன போக்கில் சுற்றிக் கொண்டிருக்கும் அவனை எப்படியாவது சரி செய்து தன்னைப் போல் நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டுமென்பது இவன் விருப்பம். “வேல வெட்டிக்குப் போயிதான் கஞ்சி குடிக்கனும்னு நம்ம குடும்பத்துக்கு தல எழுத்து இல்லியேண்ணே.  காடு கர இருக்குல்ல. இதுல வர்ற காசு போதாதா? என்னய இப்டியே விட்றுண்ணே.” அவன் பிடிவாதமாக மறுத்தான்.


பழங்காநத்தத்தில் அவர்களிருந்த வீதி நெரிசலானது. அதிகமும் இளைஞர்கள் நிரம்பிய அந்த வீதியின் கடைசி வீடு செல்வராஜுக்கு. பார்த்த முதல் தருணத்திலிருந்தே அன்பைப் பகிர்ந்து கொள்ளும் பாசக்காரர்களாகவே இங்கும்  மனிதர்கள் இருந்தனர். மதுரையே கொஞ்சம் பெரிய கிராமமாகத்தான் செல்வராஜுக்குத் தோணும். கிழக்கு பார்த்த வாசல் வெச்ச விசாலமான வீடு, ரெண்டு பேருக்கு அது ரொம்பவே அதிகம் என்றாலும் தன் மனைவி நினைத்த மாதிரி வீட்டை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக  வேண்டிய எல்லாவற்றையும் வாங்கிப் போட்டிருந்தான். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி நிறத்தில் பெயிண்ட் கூட அடித்திருந்தார்கள். அவளுக்குப் பிடிக்குமேயென பெரிய மீன் தொட்டியும் வண்ண மீன்களும் வாங்கிக் குடுத்திருந்தான். ஒவ்வொரு குட்டி மீனுக்கும் தனித்தனியாய் பெயர் வைத்து அடையாளம் மாறாமல் அவள் கூப்பிடுவதைப் பார்க்க  ஆச்சர்யமாய் இருக்கும்.


“எல்லா மீனும் ஒரே மாதிரிதான் இருக்கு ஒனக்கு மட்டும் எப்பிடிடி அடையாளம் தெரியுது?” வியப்போடு கேட்பான். “இங்க வா.” என கையைப் புடித்து இழுத்துக் கொண்டு போய் மீன் தொட்டியின் பக்கமாக உட்காருவாள்.

“ஓய் லொஜக் இங்க வா…” என மென்மையாய் கண்ணாடியாய்த் தட்டினாள் ஒரு மீன் ஆசையாக ஓடிவரும். அவளின் கைகளில் முத்தமிட்டுச் செல்லும். திரும்பி அவனைப் பார்த்து சிரிப்பாள்.

“பகல் முழுக்க இதுங்க கூடத்தான பேசிட்டு இருக்கேன். அதனால நான் என்ன சொன்னாலும் இதுங்களுக்கு புரியும்.” அவளுக்கு மரம் செடி கொடியுடன் கூட பேசும் வல்லமை இருக்குமோ என நினைத்துக் கொள்வான்.


புருஷன் பொண்டாட்டி இரண்டு பேராக இருப்பதால் சுற்றி இருக்கும் எல்லோருமே அவர்களோடு தாயாய் பிள்ளையாய் பழகினார்கள். இத்தனை இருந்தும் செல்வராஜுக்கு இருந்த ஒரே குறை, குழந்தையில்லை என்பதுதான். காலை குளித்துவிட்டு வாசலில் தலை உலர்த்தும் ஜோதியைப் பார்க்கையில் தெய்வாம்சம் நிறைந்து வழியும். ‘இந்த மகாலட்சுமிக்கா புள்ள இல்ல’ என பக்கத்து வீட்டுப் பெண்கள்  மருகுவார்கள். ஆனால் ஒருவரும் முகத்திற்கு நேராக அதைக் கேட்பதில்லை. சின்னஞ் சிறுசுக தான கொஞ்ச நா போனா சரியாப் போகுமென தங்களுக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார்கள். புதிதாக எதிர்கொள்பவர்கள் சமயங்களில்  ’இத்தன வருஷமாகியும் இன்னுமா குழந்த இல்ல?’ என்றுக் கேட்கும் போதுதான் அவனுக்கு சுருக்கென்று இருக்கும். தன் ஆண்மையின் மீதும், ஜோதியின் தாய்மை மீது முகம் தெரியாதவர்கள் எல்லாம் கல் எறிவதை அவனால் சகித்துக் கொள்ள முடியாது.

தன்னளவில் எந்தக் குறைகளும் இல்லை என செல்வராஜ் உறுதியாய் நம்பினான். மற்ற விஷயங்களில் கூட இதுவரை இரண்டு பேருக்குள்ளும் இணக்கமாகவே இருந்திருக்கிறது. நெருங்கிய நண்பர்கள் சொன்ன எல்லா மருத்துவர்களையும் ஒருமுறையேனும் சென்று சந்தித்தார்கள். முதல் இரண்டு முறை அவனுக்காக வந்த ஜோதி அடுத்தடுத்து அவன் கூப்பிட்டபோது எரிச்சல் பட்டாள்.

“எதுக்கு இப்டி வாரத்துக்கு ஒரு டாக்டர்னு இழுத்துட்டுப் போற, ஒன்னு ஒரே டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போ. இல்லியா விட்று. இப்போ கொழந்த இல்லன்னா என்ன? நாம சந்தோசமாத்தான இருக்கோம்.” இத்தனை சீக்கிரம் மறுத்துவிட்டாளே என செல்வத்துக்கு முகம் வாடிப்போனது. அவனை அப்படி பார்க்க சகிக்காமல்

“சரி சொன்னா கேக்கவா போற, உன் இஷ்டம் போலச் செய்யி.” என மருத்துவமனைக்கு செல்ல ஒத்துக் கொண்டாள். மறுபடியும் முதலில் இருந்து பரிசோதனைகள், எந்தெந்த நாட்களில் உறவு கொள்ள வேண்டும், எவ்வாறு உடலைப் பராமாறிக்க வேண்டும் என்பதோடு கூடுதலாக யோகா குறித்த இலவச விளம்பரங்கள்.


மருத்துவம் சரியான தீர்வை தரவில்லை என்றானபோது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பிரார்த்தனையை நோக்கி அவர்களின் கவனத்தை திருப்பச் சொன்னார்கள். எதிர் வீட்டு சுந்தரி அக்காவிற்கு சாமி இறங்கும். வெள்ளிக்கிழமைகளில் அதனிடம் குறி கேட்க வெளியூர்களில் இருந்தெல்லாம் ஆட்கள் வருவார்கள். அந்தக்காதான் முதலில் சொன்னது, “செல்வம் உனக்கு நம்பிக்க இருக்கான்னு தெரியல, ஆனா நம்மள மீறி சில சக்தி இருக்கு. மனுஷன் கைவிட்டாலும் சாமி கைவிடாது. உனக்கு சாப்டூர் தான சொந்த ஊரு. மஹாலிங்கத்தோட காலடியில இருக்க. நீ கேட்டு உனக்கு வரம் தராம போயிருமா? ஒவ்வொரு பெளர்ணமிக்கும் அந்தப் புள்ளையை கூட்டிட்டு மஹாலிங்கம் கோயிலுக்குப் போயிட்டு வா, எல்லாம் சரியாப் போகும்.” அந்த வார்த்தைகளை கேட்டபோதே அவனுக்குள் ஒரு நிறைவு. நேர்த்திக் கடனாகத்தான் கடந்த ஒரு வருசமாக பெளர்ணமி நாட்களில் செல்வராஜ் தன் மனைவியோடு மலையேறிக் கொண்டிருக்கிறான். மஹாலிங்கத்திடம் வேண்டிய வரம் விரைந்து கிடைக்கும் என ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு. பிழைக்கச் சென்று குடில் தேடும் எல்லா ஊர்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னால் சொந்த ஊராகிப் போனாலும் கும்பிடும் சாமியென்னவோ பிறந்த ஊரை விட்டு நகர்ந்து வருவதாக இல்லை. வேண்டுதல் ஒரு காரணமாய்ப் போனது, ஆறுதல் தேடி சொந்தங்களை வந்து பார்த்துவிட்டுப் போக.




 

பிடி

           

திரும்பிய பக்கமெல்லாம் வைத்தியர்களின் முக ஜாடை நிரம்பிய ஊர் ஜோதிக்கு.  முடக்கு வாத வியாதிகளுக்கு மிகச் சிறப்பான நாட்டு வைத்தியம் செய்யும் அந்த ஊரைத் தேடி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் ஆட்கள் வந்தபடியே இருந்தார்கள். சுருளி மலையடிவாரத்தின் அத்தனை மகத்துவங்களையும் உள்வாங்கி செழித்திருந்தது பூசலாம்பட்டி. ஜோதியின் அப்பாவும் வைத்தியர் தான். மனிதனின் எலும்புகளையும் நரம்புகளையும் வாழ்க்கை முழுக்க அணுகி மனிதர்கள் எலும்பும் நரம்புமாகவே அவருக்குத் தெரிவார்கள். கை உடைந்து, கால் உடைந்து சிகிச்சைக்கு வருகிறவர்களின் விலகிய எலும்பைத் தேடி கூட்டி வைத்துக் கட்டுகையில் அவர்களின் அலறல் வீதி முழுக்க எதிரொலிக்கும். மனிதர்கள் வலியில் அலறுவதை சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியவளுக்கு அலறல்கள் ஒரு வயதுக்குப் பின் மரத்துப் போயிருந்தன. பாசிப்பயறு மாவையும், முட்டையின் மஞ்சள் கருவையும் கலந்து கட்டுப்போட அவர்கள் தயாரிக்கும் கலவையின் மணத்திற்கு ஓரிரு நாட்கள் பழகினாலே நாசித் துவராங்களில் மட்டுமல்லாமல் நவ துவாரங்களும் நாற்றத்தைப் பொருட்படுத்தாது. ஆனாலும் ஜோதி விதிவிலக்கு. அவள் காட்டு மலர்களை நிறத்தைக் கொண்டும் மணத்தைக் கொண்டும் வெகு எளிதாக பிரித்துப் பார்க்கப் பழகியிருந்தாள்.


            மூன்று பெண் பிள்ளைகளுக்குப் பின் பிறந்த கடைசிக் குழந்தை என்பதால் இவளின் மீது  எல்லோருக்கும் அதீத அன்பு. ஆனாலும் ஜோதியின் அய்யாவிற்கு ஒரு வருத்தமிருந்தது. பதினான்கு வயதாகியும் ஜோதி பூக்காமலிருந்தாள். மற்ற பெண் பிள்ளைகளை விடவும் கூடுதல் உயரம். வீட்டிலிருந்து தெருமுனைக்கு நாலு எட்டுகளில் ஓடிவிடும் அவளுக்கு அவளின் பாவாடைகள் எப்போதும் கெண்டைக்கால் வரைதான் போதுமானதாய் இருக்கும். “ஏய் கழுத இத்தன வயசாகிடுச்சு இன்னும் குதிச்சிக்கிட்டு இருக்க. ஒரு இடத்துல அடங்கி இருக்க மாட்டியா?’ என அப்பத்தா மட்டுந்தான் இவள்  மீது எரிந்து விழும். அதற்கு கவலையெல்லாம் இன்னும் அவள் பூக்கவில்லை என்பதில்.

காளியம்மன் திருவிழாவிற்காக மூணாறிலிருந்து யானையும் செண்டை மேளமும் கொண்டு வந்திருந்தார்கள். திருவிழா நாளில் செண்டை மேளம் ஊரையே பிளந்து கொண்டிருக்க அலங்கரிக்கப்பட்ட யானை ஊர் நடுவே பிரம்மாண்டமாய் வலம் வந்து கொண்டிருந்தது. சாமி யானை என்பதால் எல்லோரும் தொட்டுக் கும்பிட்டார்கள்.


ஜோதிக்கு யானைகள் எப்போதும் ஆச்சர்யம். அடுத்தொரு பிறப்பென்றால் யானையாகவே பிறக்க வேண்டுமென நினைப்பாள். தன்னைத் தவிர உலகில் எதையும் பொருட்படுத்தாத அந்த பிரம்மாண்ட உருவம் பாகனின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு சாந்தமாக நடப்பதைப் பார்க்க ஆச்சர்யமும் வியப்புமாய் இருக்கும். அதனாலேயே யானை வரும் நாட்கள் அவளுக்கு முக்கியமானவை. அந்த வருடம் வந்திருந்த யானை இதற்கு முன்பு வந்திருந்த யானைகளை விட பிரம்மாண்டமாய் இருந்தது. அதன் நீண்ட தந்தங்களை கண்ணுறும் எவர் ஒருவரும் மயங்கிப் போய்விடக் கூடும். யானையின் பிரத்யேக அழகு அதன் தந்தங்கள். ஊதா நிற பட்டுப் பாவடையும் தாவனியும் அணிந்திருந்த அவளுக்கு அய்யா தேடி பிடித்து காளியம்மன் சாமிக்கு அணிவித்திருந்த அதே மூக்கு வளையத்தை வாங்கித் தந்திருந்தார். கூட்டத்தை விலக்கி யானை வரும் திசையில் எதிர் நின்றவள் அசைந்து வரும் அதன் ஒவ்வொரு நடையிலும் உலகை மறந்து போயிருந்தாள். கூட்டத்தில் எவரையுமே கவனிக்காமல் வந்த யானை சரியாக இவளுக்கு அருகில் வந்தபோது இவளின் கண்களை ஊடுருவிப் பார்த்தது.


அசாதாரணமான பார்வை. சில நொடிகள் தொடர்ந்த அந்தப் பார்வையில் இவளுமே கண்ணை அசைக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த பெரிய அக்கா ‘ஏய் ஜோதி யான கண்ண அப்பிடி பாக்கக்  கூடாதுடி, புத்தி பேதலிச்சுப் போகும்’ என சொன்னதுகூட இவளின் காதுகளில் விழுந்திருக்கவில்லை. அப்படியே மயங்கிப் போய் நின்றவளின் தலைமீது யானை தன் துதிக்கையை வைத்து ஆசிர்வதித்தது. கரிய நிறக் குன்று சலனமில்லாமல் தன்னைக் கடந்து செல்வதைப் போல் உணர்ந்தாள். உடல் சிலிர்த்து கண்கள் நிலைக்குத்திப் போயிருக்க அப்படியே மயங்கிப் போனாள்.


கண் விழித்துப் பார்த்தபோது வீட்டின் முற்றத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் தான் படுத்திருக்கிறோம் என்று தெரிந்தது. சுற்றிலும் அக்காக்ககளும் அய்யாவும் அமர்ந்திருந்தார்கள். அப்பத்தா அவள் தலையில் ஓங்கி குட்டியது. ‘முட்டாச் சிறுக்கி யானய உத்துப் பாக்கக் கூடாதுன்னு எத்தனவாட்டி சொல்லி இருக்கேன்.’ என கோவமாகத் திட்டினாள். ”பிள்ள பயந்து போயி படுத்திருக்கு நீ பேசாம இருத்தா’ என அய்யா தான் அப்பத்தாவை அரற்றி அனுப்பி வைத்தார். உடலெங்கும் கொதிக்க, உள்ளுக்குள் குளிர் நடுக்கமெடுத்தது. எதையோ பேச நினைத்தாள் முடியவில்லை. “நீ பேசாம படுத்து தூங்குத்தா.’ என ஆறுதலாய் அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். கண்கள் விரிந்த நிலையிலேயே ஜோதி உறங்கிப் போனாள். நான்கு நாட்கள் காய்ச்சல் குணமான அதிகாலை வேளையில் ஜோதி ருதுவெய்தியிருந்தாள்.


குறும்புத்தனங்களும் உற்சாகமும் குறைந்து சடாரென பெரிய மனுஷியைப் போன்ற தோற்றம் அவளிடம். அக்காக்கள் எல்லோருக்கும் அவளைப் பார்க்க ஒரே நேரத்தில் பொறாமையாகவும் பெருமையாகவும் இருக்கும். ருதுவெய்திய சில நாட்கள் அத்தனை தேஜஸோடு இருந்தாள். செல்வராஜ் அப்போதுதான் இவளை முதல் முறையாய்ப் பார்த்திருந்தான். தன்னை அவன் பார்த்த முதல் தருணத்திலேயே அவளுக்குத் தெரிந்திருந்தது இவன் தன்னைத் தேடி ஒருநாள் வரக்கூடுமென. அய்யா வாங்கிக் குடுத்த மூக்கு வளையம் இப்பொழுதுதான் ஜோதிக்கு அத்தனை பொருத்தமாய் இருந்தது. வைத்தியத்திற்கு வரும் ஆட்களுக்கெல்லாம் இவள் முகத்தை ஒருமுறை பார்த்தாலே நோய் குணமாகிப் போகுமெனத் தோன்றும். வயது வித்தியாசமில்லாமல் எல்லோரையும் வசீகரிக்கும் அபூர்வ கண்கள். வேறு யாரையும் விட தான் விசேசமானவள், வலிமையானவள் என்பதை திடமாய் நம்பினாள்.  பருவத்திலிருக்கும்  ஒரு பெண் யானைக்கு இந்தக் காட்டின் இளவரசி நானே என்கிற மிதப்பு எத்தனை இருக்குமோ அத்தனை மிதப்பு ஜோதிக்கு. அய்யாவுக்கு அவளை வீட்டை விட்டு அனுப்பவே தயக்கம், ஊரில் எல்லோரின் கண்களும் தன் பிள்ளையின் மீதுதான் என்பதை சடவாகச் சொல்லுவார். அப்பத்தா அவளுக்குச் சுத்திப் போடாத நாளில்லை. அக்காக்கள் திருமணம் முடிந்து போன வேகத்திலேயே இவளைப் பெண் கேட்டும் நிறைய பேர் வந்தார்கள். அய்யாவுக்கு செல்வராஜின் அம்மா தங்கச்சி முறை என்பதால் மகள் நெருங்கின சொந்தத்திற்குள்ளேயே  இருக்கட்டுமென இவனுக்கு கட்டிக் குடுக்க சம்மதித்தார்.


பெரும் வனத்தை வேட்டையாடும் வேடுவன் போல் ஒவ்வொரு நாளும் செல்வராஜ் அவளோடு கூடுவான். வெளியில் பார்க்கும் எவருக்கும் அவனுடலில் காமத்தின் வீர்யமிக்க சுகந்தங்கள் இருப்பது தெரியாது. அவளே முதல் சில நாட்கள் வியந்து தான் போனாள். “ஏன் மாமா இப்பிடி காணாதத கண்ட மாதிரி பாயுற, நான் எங்கியும் ஓடிப் போக மாட்டேன். கொஞ்சம் நிதானமா இரேன்” அவனை ஆற்றுப்படுத்த முயன்று  ஒவ்வொரு முறையும் தோற்றுப் போவாள். முதல் மாதத்தின் முடிவிலேயே உறவினர்கள் தெரிந்தவர்கள் எல்லாம் ‘எதும் விசேஷமா?’ எனக் கேட்கத் துவங்கிவிட்டார்கள். ‘இல்லங்க சும்மாதான் இருக்கேன்.’ என சொல்வதற்கு ஜோதி சங்கடப்படுவதைப் பார்த்துவிட்டு செல்வராஜ் தான் எல்லோருக்கும் பொதுவாக “நாந்தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லி இருக்கேன். சின்னப் பிள்ளதான என்ன அவசரம்?” என சமாளித்தான். சில மாதங்கள் வருடம் கடந்து அடுத்தடுத்து இரண்டு மூன்று வருடங்களையும் கடந்த போது அவளின் மீது உறவினர்கள் எல்லோருக்கும் ஒருவித எரிச்சல் வந்தது. ‘பிள்ள வாட்ட சாட்டமா மூக்கு முளியுமா இருந்தா போதுமா? வாரிசுன்னு ஒன்னப் பெத்துக் குடுத்தா தான முழு பொம்பள.” என செல்வராஜின் அம்மா ஒருமுறை எல்லோரின் காதுபடவே சொன்ன நாளில் இருந்துதான் செல்வராஜ் அவளை ஊருக்கு கூட்டிச் செல்வதைக் குறைத்துக் கொண்டான்.


ஜோதி சொற்களல் புண்பட்டிருந்தாள் ஆனால் அதை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. யானையின் பொறுமை பாகனின் கண்களில் இருக்கிறது. செல்வராஜின் கண்களில் தன் மீதிருந்த அளப்பெரிய காதலை உணர்ந்ததால் ஜோதிக்கு மதம் பிடிக்கவில்லை. யானைகளின் மீது அவளுக்கிருக்கும் அலாதியான ப்ரியம் தெரிந்திருந்ததால் ஒருநாள் யானை முடியில் செய்த மோதிரம் ஒன்றை வாங்கி வந்து தந்தான். தன் இடது கை மோதிர விரலில் அணிந்து கொண்டபோது ஜோதியின் விரல்களுக்கு அந்த மோதிரம் அவ்வளவு பொருத்தமாய் இருந்தது. கருத்த உறுதியான யானையின் அந்த சின்னஞ்சிறிய மயிர் அவள் உடலை உரசிக் கொண்டிருந்த ஒவ்வொரு நொடியிலும் அவள் சந்தோசத்தின் உச்சத்தில் லயித்துப் போயிருந்தாள். அதனாலேயே செல்வராஜ் மருத்துவர்களைப் பார்க்கலாமென அவளிடம் கேட்டபோது சந்தோசமாக சம்மதித்தாள். ”உனக்கு இஷ்டம்னா மட்டும் போலாம் ஜோதி. இல்லன்னா வேணாம்” என பக்குவமாய் அவன் சொன்னபோது தன்னைக் கையாளத் தெரிந்த பாகனாகவே செல்வராஜைப் பார்த்தாள். ஆனால் கட்டி வைக்கப்பட்ட யானைகள் மட்டுந்தானே பாகன்களுக்கு கட்டுப்படுகின்றன. ஜோதி கட்டி வைக்கப்பட்டதாய் காட்டிக் கொள்ளும் பெண் யானை. தன் இணையைக் கண்டு கொள்ளும் எந்த நொடியிலும் இவனைத் தூக்கி வீசியெறியத் தயங்காத மிருக குணமொன்று அவளிடம் இருப்பதை அவனால் ஒருபோதும் கண்டுகொள்ள முடிந்ததில்லை.





மருத்துவமனையின் மருந்து வீச்சமும், பரிசோதனைகளும் அவளை எரிச்சலூட்டின. காட்டின் மூலிகைகளுக்கும் அப்பாவின் முரட்டு வைத்திய முறைகளுக்கும் பழக்கப்பட்டுப்போன அவளுக்கு ஆங்கில மருந்தில் போதுமான நம்பிக்கை வந்திருக்கவில்லை. அய்யாவேதான் சமாதானப்படுத்தினார். “மாப்ள சொல்றதக் கேளும்மா. உன் நல்லதுக்குத்தான சொல்றாப்ள” என அவர் மருகுவதைப் பார்க்க சங்கடமாய் இருந்ததால் மனசில்லாமல் ஒவ்வொரு முறையும் அவனோடு மருத்துவமனைக்குச் செல்வாள்.  குழந்தை பிறக்கும் வரையிலும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்குகுவதாய்த் தெரியவில்லை, அவன் போக்கிலேயே விட்டுவிடுவோமென இவள் நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ஒருமுறை பெண் மருத்துவர் இவளிடம் தனியாகப் பேசும் போது

“அவருக்கு உயிர் அணுக்கள் விந்துல குறைவா இருக்கும்மா. இவ்ளோ வருஷம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டதுலயே அதிகமாகி இருக்கனும். ஆனா இதுவர ஆகலைன்னா ஆச்சர்யமா இருக்கு. ம்ம்ம். உங்கள முயற்சி பண்ணிப் பாக்க வேணாம்னு சொல்லல. ஆனா இன்னொரு வாய்ப்பு இருக்கு. அதுக்கு முயற்சி பண்ணி பாக்கலாம்?” என மெதுவாக விஷயத்தைத் துவக்கினாள்.

“எனக்கு பெருசா விஷயம் தெரியாது டாக்டர். எதுவா இருந்தாலும்  புரியற மாதிரி சொல்லுங்க.” என சிரித்தபடியே ஜோதி சொன்னாள்.

“உன்னோட கருமுட்டைகள் ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. நீங்க ஏன் வேற ஒருத்தர் கிட்ட விந்துதானம் வாங்கி குழந்த பெத்துக்கக் கூடாது?” ஒவ்வொரு வார்த்தையையும் அந்த டாக்டர் தயங்கித் தயங்கித்தான் சொன்னாள். ஜோதிக்கு என்னவோ போலாகிவிட்டது.

“ச்ச ச்ச என்னங்க இப்பிடிலாம் பேசறீங்க. அந்த மனுஷனுக்குத் தெரிஞ்சா ரொம்ப சங்கடப்படுவாரு. வேணாம் டாக்டர்.” அவசரமாய் மறுத்தாள்.

“இன்னிக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம்மா. நிறைய பேர் இப்பிடி பெத்துக்கறாங்க. இதுல தப்பு ஒன்னுமில்லையே.” இவளை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடுவதென அந்த டாக்டர் உறுதியாய் இருக்க, பதிலுக்கு மறுப்பதில் இவளும் உறுதியாய் இருந்தாள். சோர்ந்து போன டாக்டர் “சரிம்மா நீ யோசிச்சு சொல்லு. தேவப்பட்டா உன் புருஷன் கிட்டயும் பேசிப்பாரு.” என முடித்துக் கொண்டார்.


வீடு வந்ததிலிருந்து  ஜோதிக்கு அது குறித்த சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தாலும் செல்வராஜிடம் கேட்டால் கண்டிப்பாக வருத்தப்படுவான் என நினைத்தாள். குழந்தையின் காரணமாய் தன்னை யாரும் காயப்படுத்திடக் கூடாதென அவன் உறுதியாய் இருந்ததைப் போலவே அவனும் காயப்பட்டுவிடக் கூடாதென ஜோதி உறுதியாய் இருந்தாள். தன் பெண்ணுடலை ஆக்ரமிக்கும் ஒவ்வொரு முறையும் நான் அசாத்தியமானதொரு ஆண்மகன் என்ற உணர்வுகளையே அவன் முகத்தில் இத்தனை வருடங்களாக பார்த்திருந்ததால் ஓரளவு அவனை நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். ஆனாலும்  குழந்தை பெற்றுக் கொள்வதுதான் எத்தனை சந்தோசம்? தன்னைப் போலவே பெரிய பெரிய கைகளும் கால்களும் உருண்டை முழிக் கண்களும் தடித்த உதடுகளுமாய் இரண்டு குழந்தைகள். வலிமையான குட்டியானைகளைப் போல் அவர்கள் வளர்வதைப் பார்க்க எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும்? நினைத்த போதே அவளுக்கு மார் வீங்கி முட்டியது.


இந்த விருப்பத்தை தனக்குள்ளேயே வைத்துதான் சந்தோசப்பட்டுக் கொள்ள முடியுமா? இரவுகளில் உறங்கமுடியாமல் தவித்தாள். ஒவ்வொரு முறையும் புதிய மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் முயற்சி பண்ணிப் பாப்பமே ஜோதி என்றுதான் சொல்லுவானே தவிர தன்னிடம் குறையிருக்கிறது என்பதை அவன் இத்தனை நாட்கள் வெளிப்படுத்தி இருக்கவில்லை, ஆக இந்த விஷயத்திற்கு உடன்பட மாட்டான் என்பது அவளுக்கு தெளிவாக விளங்கியது. இரவுகளில் தன்னை இறுக அணைத்து உறங்கும் செல்வராஜே அந்த நீலநிற இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஒரு குழந்தையாகத்தான் தெரிவான்.

மருத்துவமனை முயற்சிகள் முடிந்து ஆன்மீக வழிகளின் பக்கமாய் அவன் திரும்பியபோது ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் சதுரகிரி மலையேறப் போகிறோம் என்கிற எண்ணமே அவளுக்கு உற்சாகம் தந்தது. குடும்பம் குழந்தை என்பதற்கு அப்பாலும்  ஒரு பெண்  சந்தோசம் கொள்ள எத்தனை விஷயங்களிருக்கின்றன. காட்டுவழிப் பயணம் அவளுக்குப் புதிதல்ல. கன்னகி கோவிலுக்கு பல வருடங்கள் நடந்து பழகியவள். இரவில் காடு பல்லாயிரம் கண் கொண்டு விழித்திருக்கையில் ஒரு மனிதன் எந்த ரகசியங்களும் இல்லாமல் பயணிக்க முடியும். காட்டின் முன்னால் பொய்யாய் எந்த ஒன்றையும் செய்ய முடியாது. அதனாலேயே கடவுளின் மீது அவள் கூடுதல் நம்பிக்கை வைத்தாள். அவனை விடவும் பெளர்ணமி நாட்களில் ஊருக்கு வந்து செல்வதில் அவளுக்கு அலாதியான விருப்பம்.


இந்த மலைக்காகவும் காட்டிற்காகவுமே இந்த ஊரின் மீது சொல்லொண்ணா பிரேமை வளர்ந்தது ஒவ்வொரு நாளும். கருப்புதான் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு வழிகாட்டியாய் உடன் வருவான். காடு துவங்கும் வரை உடன் வருகிறவர்கள் குறித்து இருக்கும் சிந்தனையெல்லாம் காடு துவங்கிய நொடியிலேயே அவளுக்கு மறைந்து போய்விடும். ஊரின் வீதிகளில் திருவிழாக்களில் பார்த்துப் பழகிய யானையை ஒரு அதிகாலையில் முதல் முறையாக காட்டில் வைத்துப் பார்த்தபோது அவளின் காதுகள் விடைத்துக் கொண்டன. ஆம் ஒற்றை யானை. காட்டில் யார் ஒருவராலும் வீழ்த்திவிட முடியாத பிரம்மாண்டமான யானை. தனக்கருகில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாத அந்த அபூர்வ மிருகத்தை மெய் மறந்து பார்த்தாள்.


யானைக்கும் அவளுக்குமான பழைய கதைகள் எல்லாவற்றையும் அறிந்திருந்த செல்வராஜ் உடன் வந்த ஆட்களோடு சேர்ந்து வம்பாக இழுத்துக் கொண்டு வந்தான்.

ஊர் வந்தபிறகு எப்போதும் போல் இயல்பாகிவிட்ட ஜோதி ”எனக்கென்னவோ மஹாலிங்கத்தோட அருளால நம்மளுக்கு சீக்கிரமே புள்ள பொறந்திரும்னு தோணுது மாமா” என நம்பிக்கையாகச் சொன்னாள். இந்த வார்த்தைகளுக்காகவே செல்வராஜ் இன்னும் இரண்டு முறை மலையேறி வரவும் தயாராய் இருந்தான். அதன் பிறகு பெளர்ணமி நாட்களை அவர்கள் தவறவிடுவதில்லை. காட்டில் உலவும் தருணங்களில் தன் சுயம் கண்டுகொண்ட பூரிப்பில் இருந்தவளுக்கு, இன்னொரு முறை அந்த மருத்துவர் தன்னை சந்திக்க வரும்படி அழைத்தபோது என்னவோ போலிருந்தது.  ஜோதி மறுத்தும், மருத்துவர் இரண்டொரு முறை திரும்ப திரும்ப அழைத்ததால் கடைசியாக ஒருமுறை சந்தித்து வரலாமெனச் சென்றாள்.

“டாக்டர்  நான் நல்லா யோசிச்சு பாத்துட்டேன். நீங்க சொன்னது சரியா வராது. என்னய விட்றுங்க.” என உறுதியாய் மறுத்தாள். அந்த டாக்டர் சிரித்தபடி “நீ அதுக்கு ஒத்துக்க மாட்டன்னு எனக்குத் தெரியும்மா.. ஆனா உன்னால வேற ஒன்னு செய்ய முடியும்.  அதுக்குத்தான் வரச் சொன்னேன்.”  சொன்னாள். ஜோதிக்கு இந்த புதிய கோரிக்கை என்னவாய் இருக்குமென்கிற தயக்கம்.

“நீ பயப்படற மாதிரி ஒன்னும் இல்லம்மா. எப்பிடி ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைவா இருக்கோ அதே மாதிரி சில பெண்களுக்கு கருமுட்டைகள் ரொம்ப குறைவா இருக்கும். ரெண்டு பேருக்கும் ஆரோக்கியமா இருந்தாதான் ஒரு குழந்தை உருவாகும். அப்பிடி கருமுட்டை குறைவா இருக்க பெண்களுக்கு உன்ன மாதிரி ஆரோக்கியமா இருக்க பெண்கள் கருமுட்டைய தானம் பண்ணலாம். உனக்கு இது சம்மதம்னா மட்டுந்தான் இதுவும்.” தனது இந்த கோரிக்கையை நிச்சயம் அவள் மறுக்கமாட்டாளென டாக்டர் நம்பினார். ஜோதி அமைதியாக யோசித்தாள். தன்னால் ஆரோக்கியமானதொரு குழந்தை உருவாக முடியுமென்றால் அது யாருக்கு கிடைத்தால் தான் என்ன? குறைந்த பட்சம் எங்கோ தனது உயிரின் ஒரு பகுதி புத்தம் புதிய ஜீவனாய் வளருமென நினைத்த போதே முரட்டுக் கைகளும் கால்களும் உருண்டைக் கண்களும் கொண்ட அந்த வினோதக் குழந்தையின் முகம் நினைவிற்கு வந்தது. சிரித்தபடியே ஜோதி சம்மதித்தாள்.


முதல் முறையாக கருமுட்டை தானம் செய்துவிட்டு வீடு திரும்பிய தினத்தில் ஜோதிக்கு இனம் புரியாத சந்தோசம், அவர்கள் தந்த தொகையைக் கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டாள். தன் கனவு எங்கோ யாருக்கோ நிஜமானதாய் இருக்கப் போகிறது. சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வது என்பதன் புதிய அர்த்தமாய் தனது செயல் தோன்றியது. ஆனால் அவள் செல்வராஜிடம் இதைச் சொல்லியிருக்கவில்லை. தனக்கேயான இந்த ரகசிய உலகிற்கு வெளியிலேயே அவனை வைத்திருக்க விரும்பினாள். அவனுக்கு உரிமையே இல்லாத ஒன்றில் உரிமை கொண்டாடும் எண்ணம் ஒருநாளும் அவனுக்கு வந்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கையும் அதை மறைக்க ஒரு காரணம். மூன்று மாதங்களுக்குப் பிறகு இவளே மருத்துவரை அழைத்து திரும்பவும் எப்போது வந்து தானம் செய்யட்டுமெனக் கேட்டாள்.


“நீ நெனைக்கிற மாதிரி அடிக்கடி வந்தெல்லாம் டொனெட் பண்ணிட முடியாது ஜோதி. உடம்பு கெட்டுப் போயிடும். தேவைப்படும் போது நானே கூப்பிடுவேன் சரியா?” என டாக்டர் சொன்னதைக் கேட்க இவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. ஒவ்வொரு மாதமும் வீணாகத்தானே போகிறது, யாருக்கேனும் பயன்பட்டால் என்னவென்று நினைத்தற்குப் பின்னால் ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவரின் மூலமாய் தனது  புதிய கரு வளரட்டுமே என்கிற பேராசை. இந்தப் புதிய சந்தோசத்திற்குப் பின்னால் செல்வத்தோடு கூடும்போதெல்லாம் அவன் தன்னை எதிர்கொள்ள முடியாமல் அச்சம் கொள்வதை கவனித்தாள். இத்தனை காலம் அவளை ஆக்ரமித்திருந்தவனுக்கு இப்பொழுதுதான் அவளது பலம் புரிந்தது.


முதல் முறை காட்டில் அந்த யானையைக் கண்டதற்குப் பின்பாகத்தான் தனக்கு இப்படியானதொரு சந்தோசம் கிடைத்திருக்கிறதென ஜோதி நம்பினாள். கருமுட்டைகளை தானம் செய்யத் துவங்கிய பிறகு ஒவ்வொரு முறையும் மலையேறும் போதும் அவள் மனம் காட்டில் அந்த யானையைத் தேடி ஏமாறும் .ஒரேயொரு முறை அதனருகில் நின்று கண்ணோடு கண் பார்த்து நன்றி சொல்ல வேண்டும். அல்லது அதன் துதிக்கையை இறுக அணைத்து முத்தமிட்டால் போதும். ‘யானையின் கண்களை நேர்கொண்டு பார்த்தால் புத்தி பேதலித்துப் போகுமென அக்காவும் அப்பத்தாவும் சொன்னவையெல்லாம் எத்தனை பொய்களென்பதை பின்னொருநாள் அவர்களுக்கு சொல்லியே ஆகவேண்டுமென நினைத்துக் கொள்வாள். அந்த மலையும், மரங்களும் மஹாலிங்கமும் அங்கேயேதான் இருந்தார்கள். அந்த யானை மட்டும் திரும்பவும் அவளின் கண்களில் பட்டிருக்கவில்லை.


களிறின் நிழலில் கனிதல்.


காற்றின் ஒலியென சொல்ல முடியாத  பேரோசை வெளியெங்கும் சூழ்ந்திருந்தது.  பல்லாயிரம் குதிரைகளின் குளம்பொலியாய் இருக்கலாம். யானைக் கூட்டங்களின் பிளிறலாய் இருக்கலாம். எதுவானாலும் அசாதாரணத்தின் கொந்தளிப்பு அந்த இரைச்சல்.  மஹாலிங்கத்தை தரிசித்து விட்டு வரும் வழியில் இதென்ன முனியின் அலம்பலா? அச்சத்தில் கருப்புவுக்கு மூத்திரம் முட்டி வயிறு வலி கண்டது. அருகிலிருந்த அடர்ந்த மாமரத்தை ஒட்டி சிறுநீர் கழிக்க ஒதுங்கினான். தரையெங்கும் படர்ந்திருந்த மாமரத்திலிருந்து காட்டமான மா வாசணை.  தனித்திருப்பதான அச்சத்தில் கால்கள் நடுங்கின போது இரைச்சலின் சத்தம் அதிகமானது. சிறுநீர் முன்னும் பின்னுமாய் தடுமாறி அவன் கால்களை நனைத்த போது கருப்புவுக்கு  மூத்திரம் நின்று போனது. முனியின் மீதிருந்த அச்சம் ஒரு நொடி தன் மதினியின் நினைவுகளாய் மாற, அவள் திரும்பி வருகிறாளாவென எட்டிப் பார்த்தான் . அந்தப் பாதையில் அவளின் நிழல் மட்டுமே இடைவெளியின்றி படர்ந்திருந்தது. செல்வராஜும் மற்ற ஆட்களும் இன்னும் அச்சம் விலகாமல் அதேயிடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். யானையின் பிளிறலும், நீரை ஆவேசமாக அது வாரி இரைக்கும் சத்தமும் சீரான இடைவெளியில் கேட்கத் துவங்கியபோது எல்லோருக்குள்ளும் ஒரு நடுக்கம்.


“அண்ணே நீயும் நானும் மட்டும் ஓட வரைக்கும் போயி என்னன்னு பாப்பமா? ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிரப் போகுது?”

திரும்பி வந்த கருப்பு செல்வராஜிடம் சொன்னபோது மற்றவர்களும் அவனை ஆமோதித்தனர்.

“ஏப்பா நாங்க சொல்ற வரைக்கும் யாரும் எங்கியும் நகராதிக.” கருப்பு அவர்களின் பதிலுக்கு காத்திராமல் வேகமாக நடக்க செல்வராஜும் அவனைத் தொடர்ந்தான். விடியலுக்கான வெளிச்சம் மெது மெதுவாய் வானில் நிரம்பிக் கொண்டிருக்க இரண்டு பேரும் ஓடையின் சத்தத்தை கேட்க முடிகிற நெருக்கத்திற்கு வந்துவிட்டிருந்தனர்.


தூரத்திலிருந்தே ஓடையின் தெற்கு பக்கமாய் அசையாமல் ஒரு முரட்டு யானை குனிந்து நீர் அருந்திக் கொண்டிருப்பதை இருவரும் கவனித்தார்கள். எப்போதும் ஓடைக் கரையிலிருந்தே நீர் அருந்தும் மிருகங்களைப் போல் இல்லாமல் இந்த யானை நீருக்குள் இறங்கியிருந்தது. யானையின் இரண்டு கால்களும் நீரில் பாதி மூழ்கியிருக்க அவ்வப்போது யானை துதிக்கையால் நீரை வாரி இரைத்தது. ஆனால் இந்த ஜோதி எங்கு போனாள் ? இருவரும் இன்னும் சில அடிகள் முன்னால் நடந்தனர். இப்பொழுது வெளிச்சம் யானையின் உடலும் அதன் நீர் படர்ந்த நீண்ட வாலும் தெரியும் அளவிற்கு தெளிவாகி இருக்க யானையின் தந்தம் இருக்குமிடத்திலிருந்து இரண்டு மனிதக் கால்கள் மட்டும் அதன் இரு பக்க காதுகளையும் நீரோடு வருடிக் கொண்டிருப்பதைக் கண்டு உறைந்துபோயினர். அந்தக் கால்களில் அச்சமோ நடுக்கமோ இல்லை. யானையின் கால்களைப் போலவே உறுதி. கருப்புவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு செல்வராஜ் இன்னும் சில அடிகள் முன்னேறியபோது யானை உற்சாகமாக தன் உடலை வேறு பக்கங்களில் அசைத்தது. அதிகாலையின் வெளிச்சமும் நீர்மையும் பட்டு பொன்னிறத்தில் மினுங்கும் அதன் தந்தத்தின் மேல் அதே நிறத்தில் சின்னதொரு உடையுமில்லாமல் ஜ்வலித்தது ஜோதியின் உடல். யானையின் முன் நெற்றியில் முகம் சாய்த்து தந்தத்தில் வலுவாக உட்கார்ந்திருந்தவளை தனக்கே தனக்கான உடமையைப் போல் துதிக்கையால் அது இறுக அணைத்திருந்தது. தன்னுடலில் ஒவ்வொரு பாகத்தையும் அந்த யானைக்கென அவள் தாரை வார்த்திருப்பதை துதிக்கையில் படர்ந்திருந்த ஸ்தனங்களும், தந்தங்களில் பெரு விருப்போடு அமர்ந்திருந்த நிதம்பமும் தெளிவாய் உணர்த்தியது. கழுத்திலிருந்து நீண்டு விரிந்திருந்த ஜோதியின் நீள் கூந்தல் நீர்ப்பாம்புகளாய் அலைய விடியலைக் காண துணிவில்லாத அச்சத்தோடு சகோதரர்கள் இருவரும் வந்த வழியிலேயே வேகமாய்த் திரும்பி நடந்தனர்.

 

·       நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல் ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டது.

 

 

119 views
bottom of page