top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

நாய்வேட்டம்



வாயின் இரண்டு ஓரங்களிலிருந்தும் வெள்ளி நூலென சேகருக்கு எச்சில் ஒழுகியபடியே இருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் போதே சின்னதாய் ஒரு அரிப்பை உணர்ந்தான். உடல் முழுக்க அந்த அரிப்பின் அடையாளமாய் சிறிது சிறிதாய் தடிப்புகள் உண்டாகி இருந்தன. ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போட்டுவிட்டு உடை மாற்றிக் கொண்டவனுக்கு நேற்று ஒரு நாயைப் பிடிக்கும் போது அது பிராண்டி வைத்ததில் பிய்ந்து போன தன் ட்ரவுசர் பட்டனின் நினைவு இப்பொழுதுதான் வந்தது. கால்சட்டை இடையில் நிற்கவில்லை. ஊக்கை மாட்டி சமாளித்தான். நா வறண்டு தாகமெடுத்தது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம். முதலில் இதை சாதாரணமாகத்தான் நினைத்திருந்தான். ஒரு வாரத்திற்கு முன்பு மேயரைப் பார்த்து மணு கொடுப்பதற்காக சென்றிருந்தார்கள். வழக்கத்திற்கு மாறாக தொண்டை வறண்டு கடுமையான தாகம் ஏற்பட்டதுடன் நா வறட்சியும். தொடர்ந்து நான்கு வார்த்தைகள் கூட பேச முடியவில்லை. அவனுடன் வந்த மாரிதான் சமாளித்துப் பேசிக்கொண்டிருந்தான். எப்படியும் தனக்கு பெர்மனண்ட் வேலை கிடைத்துவிடுமென்கிற நம்பிக்கையோடு சேகர் இந்த வேலைக்கு சேர்ந்து இது எட்டாவது வருடம். ஒவ்வொரு தேர்தல் முடியும் போதும் புதிய மேயரைச் சந்தித்து அவன் மணு கொடுக்கத் தவறுவதில்லை, இருந்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் அந்த மணுக்கள் அலமாரிகளுக்குள் உறங்கியபடிதான் இருக்கின்றன.


ஒரு கோடி பேருக்கு பக்கமாய் மனிதர்கள் வசிக்கும் இம்மாநகரில் நாய்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் அந்த நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சரியான நேரத்தில் ஊசிபோட்டு வெறி ஏறாமல் பார்த்துக் கொள்ளவும் இருக்கும் நாய் பிடிக்கிறவர்கள் மொத்தம் முப்பது பேர்தான். அதிலும் பதினைந்து பேரைத் தவிர்த்து மற்றவர்கள் அத்தனை பேரும் தற்காலிகப் பணியாளர்கள். நாளொன்றுக்கு இரநூற்றி ஐம்பது ரூபாய் சம்பளத்தில் குறைந்தபட்சம் பதினைந்து நாய்களைப் பிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் வேறு. ”நாய் பிழைப்பு” என விளையாட்டாகக் கூட அவன் தன் வேலயைக் குறித்து பேசமாட்டான். பகல் முழுக்க நாய்களின் சத்தத்தோடும் அலறலோடும் கழிவதால் இரவில் எந்தச் சத்தம் கேட்டாலும் நாயின் ஓலமாகவே எதிரொலிக்கும்.


சேகருக்கு வேலை நேரத்திலும் குழந்தைகளின் நினைவு. தனக்கு குழந்தை இல்லை என்பதால் பாக்கிற எல்லாக் குழந்தைகளிலும் தன் குழந்தைக்கான சாயல்களைத் தேடினான்.


”வூட்டுக்காரிய தாஜா பண்ணி புள்ள பெத்துக்கடான்னா ஊர்ல இருக்க புள்ளைங்களுக்கு எல்லாம் பொற வாங்கிக் குடுத்துனு இருக்க, இன்னா ஆளுடா நீ?”


பழனியும் மாரியும் டபாய்க்கும் போது வெகுளியாக சிரித்து சமாளிப்பான். குழந்தை வேண்டும், அதற்காக தன் மனைவியை சிரமப்படுத்தக் கூடாதென்பதால் மல்லிகா சம்மதிக்கும் வரைக் காத்திருப்பதென உறுதியோடிருக்கிறான். கார்ப்ரேஷனில் வேலை செய்வதாகச் சொல்லித்தான் சேகருக்கு அவளை திருமணம் செய்து வைத்தார்கள். எதிர்பார்ப்புகளின் எந்தச் சுவடுகளும் இல்லாது இவனோடு வந்தவள் இயல்பில் யாருடனும் அதிகம் பேசாத இவனையும் எல்லோரையும் போல் சிரித்துப் பேசி கலகலப்பாக்கினாள். அவள் முன்னால் சந்தோசமாய் சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் அவளை ஏமாற்றுகிறமோ என்கிற குற்றவுணர்ச்சி எழ, சில நாட்களுக்குப் பின் அவளிடம் நிஜத்தைச் சொல்லிவிட்டான்.


”கார்ப்ரேஷன்ல தான் வேலை பாக்கறேன் மல்லிகா, ஆனா நாய் புடிக்கிற வேல. இன்னும் பெர்மனண்ட் கூட ஆகல. எப்பிடியும் இந்த வர்சம் ஆக்கிடுவாங்க.”

“நீ என்ன சொல்றன்னு புரியல…”


அவன் விளையாட்டுக்கு சொல்லக்கூடுமென நினைத்தாள். ஆனால் விளையாட்டுத்தனமாய் எதையுமே பேசத் தெரியாதவன். கைகள் தடுமாற கண்கள் ஓரிடத்தில் நிலை கொள்ள முடியாமல் அலைந்தன. சொல்லப்படாது அடைத்துவைக்கப்படும் உண்மை ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் குற்றவுணர்ச்சியை எதிர்கொள்ளும் திராணியில்லை அவனிடம். மல்லிகா முதல் தடவையாய் தன் வாழ்க்கையில் நாய் பிடிக்கும் ஒருவனை எதிர்கொண்ட போது அவன் யாரோ ஒருவன் என்பதில்லாமல் தன் கணவனாக இருந்ததற்காக சங்கடப்பட்டாள்.


“ஏண்டா நாயே குடும்பத்தோட சேந்து ஏமாத்துனீங்க?”

அவன் முகத்திலும் மாரிலும் அடித்துக் கேட்க வேண்டுமென கைகள் பரபரத்தன. அடக்கிக் கொண்டு அவனையே பார்த்தாள். மனிதனுக்கு எத்தனை நெருக்கமாய் இருந்தாலும் நாய் ஒரு மிருகம். சதாவும் நாய்களுடனேயே வாழும் இவனுக்குள்ளும் அந்த மிருக உணர்ச்சிதான் அதிகமாய் இருக்குமோ என அவளுக்குள் சந்தேகம் எழுந்தது. அதுவரையிலுமான அவனது எல்லா செயல்களையும் இப்பொழுது சந்தேகத்துடன் யோசித்துப் பார்த்தாள்.


“நாய் பிடிக்கிற வேலையா? நாயப்பிடிச்சு என்ன செய்வீங்க? அடிச்சிக் கொல்லுவிங்களா?”


“இல்ல… நாயிங்களுக்கு வெறி பிடிக்காம இருக்க ஊசி போடுவோம். அப்பறம் கருத்தடை ஆப்ரேசன் பண்ணிட்டு, ஒரு மூணு நாள் வெச்சிருந்துட்டு மறுபடியும் எந்த ஏரியாவுல புட்ச்சமோ அதே ஏரியாவுல கொண்டு போயி விட்டுடுவோம்.”


தனக்குள் எழும் கோவத்தை என்ன செய்வதெனத் தெரியாமல் வெறுப்போடு வேறு பக்கமாய்த் திரும்பிக் கொண்ட மல்லிகாவின் முகம் மாறிப் போனது.


”இத ஏன் முன்னாலயே சொல்லல?”


அது கேவலமான அல்லது வெளியில் சொல்லத் தகுந்த ஒரு வேலையில்லை என்பதை எல்லோரையும் போலவே அவளும் அப்போது நினைத்தாள்.


“நான் சொல்லனும்னுதான் நெனச்சேன். வீட்ல இருக்கவங்கதான் விடல… மன்னிச்சுக்கோம்மா…”


சேகர் அப்போதைய சூழலில் அவளின் காலில் விழுந்தாலும் தப்பில்லையென நினைத்தான். மல்லிகாவுக்கு அவன் அருகாமை கசந்தது. அவனை விட்டு எங்கும் போகவும் நாதியில்லை. பிறந்த வீட்டிற்கு பல காலமாகவே வேண்டாதவளாக இருந்தவள். குறைந்தபட்சம் இங்கு இருக்கும் இந்த தனிமை போதுமென நினைத்துக் கொண்டாள்.





சில நாட்கள் கோவத்தில் பேசாமல் விலகி இருந்தவளுக்கு நாய் பிடிக்கும் அவனது வெவ்வேறான பிம்பம் புதிரான ஆசைகளை உருவாக்கியது. நாளொன்றுக்குப் பதினைந்து நாய்களை புடிக்கிறான் எனத் தெரிந்ததும் நாயை எப்படி பிடிப்பார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்துவிட்டது. மெலிந்த அவனுடலில் ரகசியமாக மிருகங்களின் பாவங்களைத் தேடத் துவங்கினாள். சேகர் எல்லோரையும் போல இயல்பாக இருக்கமுடியும் என்பதை அவளால் நம்பியிருக்க முடியவில்லை.


“நீ நாய் பிடிக்கிறத பாக்கனும், ஒரு நா என்னியக் கூட்டினு போறியா?”


தயக்கத்தோடு மல்லிகா அவனிடம் கேட்டாள். அவனுக்கு தர்மசங்கடமாய் இருந்தது. மறுக்க முடியாமல் அடுத்த நாள் காலையில் கூட்டிப் போவதாகச் சொன்னான்.


அதிகாலையில் வீட்டிலிருந்து கிளம்பியவன், அவளிடம் நான் கூப்பிடும் போது வந்தால் போதும் எனச் சொல்லியிருந்தான். காலை எட்டுமணி வாக்கில் யுத்தமொன்றைப் பார்க்கப் போகும் ஆர்வத்துடன் போனாள். சூளைமேடு ரயில்வே ஸ்டேசனிலிருந்து நெல்சன் மாணிக்கம் சாலையோடு சேரும் வீதியில் மஞ்சள் நிற வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதுதான் அவன் சொன்ன அடையாளம். சேகரைத் தேடிப்பார்த்தபோது எதிரில் இருக்கும் டீ கடையில் அவனும் அவனது சகாவும் தேநீர்க் குடித்துவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். இருவர் கையிலும் மெல்லிசான நீண்ட சுருக்குக் கயிறுகள் மட்டுமிருந்தன. இதை வைத்து எப்படி நாயைப் பிடிப்பார்களென அவளுக்கு ஆச்சர்யம். சேகர் இவளைக் கவனித்து சிரித்தான். சாலையைக் கடந்து போகப் போனவளை அங்கிருந்தே பார்க்கும்படி சைகை செய்தான். சேகரும் அவன் சகாவும் இயல்பாக நடந்து போவது போல் ஒரு நாயைத் தொடர்ந்து சென்றனர். சேகர் முன்னாலும் மற்றவன் பின்னாலுமாக நடக்க சேகர் தன் கையிலிருந்த சுருக்கை நாயின் கழுத்தில் தூக்கிப் போட்டான். அதுவரையிலும் இயல்பாக ஓடிய நாய் சடாரென சுதாரித்து உடலை உசுப்பி ஒரு துள்ளு துள்ளியது. தன்னைக் காப்பாற்றச் சொல்லி தெருவில் போவோரையெல்லாம் பார்த்து மன்றாடியது. பின்னால் வந்தவன் லாவகமாக அதன் கால்களைப் பிடித்துத் தூக்க சேகர் நாயின் கழுத்தை அசையாதபடி பிடித்துத் தூக்கிக் கொண்டு போய் வேனில் போட்டான். அந்த வீதியிலிருந்த எல்லோரும் அந்த சில நொடிகள் அவர்கள் இருவரையும் அருவருப்பான ஜந்துக்களாகவே பார்த்தனர். மல்லிகாவுக்கு அவனிடம் நெருங்கிப் போய் பேசவேண்டுமென இருந்த விருப்பம் போய் அங்கிருந்து தப்பித்து ஓடினால் போதுமென்றாகிவிட்டது. சுருக்கு மாட்டப்பட்ட நாய் தான் தானோ என்கிற வலி. வேகவேகமாக ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடந்தாள். இதை முன்பே எதிர்பார்த்திருந்ததால் சேகர் அவளை நிறுத்த முயற்சித்திருக்கவில்லை.


சேகர் நாய்பிடிக்கிறவனென்பது அவள் குடும்பத்திற்குத் தெரிய வந்த போது அவனோடு சேர்த்து இவளையும் தவிர்க்கவே நினைத்தார்கள். அந்தப் பார்வைகளிலிருந்த அருவருப்பு சகித்துக் கொள்ளமுடியாத குமட்டலைத் தந்தது. யாரோ சிலர் எப்போதும் தன்னை கேலி செய்து கொண்டிருக்கிற வலியும் சந்தேகமும் அவளுக்குள் எழ, அந்த உணர்ச்சிக் கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடமிருந்து ஒரு இடைவெளியை உருவாக்கியது. தனக்குள் வெறுமை நீண்ட சுவரென வளர்ந்து கொண்டிருந்ததைக் காட்டிக் கொள்ளாமல் தன்னை இயல்பாக வைத்துக்கொள்ள சிரமப்பட்டாள். தன் மீதான கோபம் தீரும் நாளில் அவள் இயல்பாகி விடுவாளென நம்பியிருந்த சேகர் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை இழந்தான். குழந்தைப் பற்றின பேச்சு வரும்பொழுது அவள் முன்னைவிடவும் இறுக்கமாகி விடுவாள்.


”எல்லாரும் கேக்கறாங்க மல்லிகா, இன்னாடா புள்ள பெத்துக்கற ஐடியா இருக்கா இல்லியான்னு? இத்தாச்சும் பரவால்ல. ஆஃபிஸ்ல நான் டொக்காயிட்டேன்னு முதுகுக்குப் பின்னால பேசி சிரிக்கிறாங்க… அசிங்கமா இருக்கு….”

தயங்கி தயங்கி சொன்னவனை முறைத்தாள்.


“உனக்கு வர்ற துட்ட வெச்சிகினு கொழந்தைய எப்டி வளக்கறது? இன்னும் கொஞ்ச நாள் போவட்டும்.”


அப்போதைக்கு சமாதானம் சொன்னாலும் இவனுக்காக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் அவளுக்கு மனம் ஒப்பவில்லை. தன்னை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறான், ஆனாலும் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என நினைக்கும் போது சமயங்களில் அவளுக்கே வருத்தமாகக் கூட இருக்கும். கரிசனத்தோடு பார்த்துக் கொள்ளும் அவன் மீது நேசம் இல்லாமலில்லை. ஒவ்வொரு தினமும் எத்தனை பேரை பாதுகாப்பதற்காக தன்னை பணயம் வைக்கிறான் என நினைத்த போது அவன் மீது பெரிய மரியாதை வந்தது. அவன் உடலில் இருக்கும் காயங்களைப் பார்க்கையில் பாவமாய் இருக்கும்.


”சொம்மா புள்ள வோணும் வோணும்னு சொல்லினே இருக்கயில்ல. போ போயி ஆளுங்களப் பாத்து துட்டு எதுனா குட்த்துனாலும் பெர்மெனண்டா ஆவறதுக்குப் பாரு…”


“நானும் ஆளுங்களப் பாத்துனுதான் மல்லிகா இர்க்கேன்… செட் ஆவ மாட்டேங்குது…”


“இந்த டபாய்கிற வேலையெல்லாம் வோணாம். ஏதோ நானா இர்க்க சொல்ல உன்னாண்ட குடும்பம் பண்ணினு இர்க்கேன்… வேற ஒர்த்தின்னா எப்பவோ எகிறி இருப்பா…”

அவள் கோவமாகவும் கேலியாகவும் பேசுகிற நேரங்களில், ஏதோவொரு வகையில் தன்மீது அவளுக்கு அக்கறை இருக்கிறதென சந்தோசப்பட்டுக் கொண்டான்.


வீட்டிலேயே இருக்கப் புடிக்காமல் மல்லிகாவும் வேலைக்குப் போகத் துவங்கியபோது தெருவில் இருந்தவர்களால் அவள் எல்லோருடனும் சகஜமாகப் பழகியதை இயல்பாகப் பார்க்க முடியவில்லை. தங்களின் ஏராளமான கற்பனைகளால் வெவ்வேறு ஆட்களோடு தொடர்பு படுத்தி நேரடியாகவும் மறைமுகமாகவும் இவனிடம் கதைகளை சொல்லத் துவங்கினர். சேகர் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தனக்கான உலகையும் மனிதர்களையும் பெற்றுவிட்ட சந்தோசத்தில் அவள் ஒரே வீட்டிலிருந்தபோதும் கொஞ்சம் கொஞ்சமாய் தனியானதொரு உலகை வடிவமைத்துக் கொண்டாள்.


மல்லிகா என்னும் ஒரே பெண்ணைப் பற்றி எப்படி ஏராளமான கதைகளை இவர்களால் சொல்ல முடிகிறது. சில நாட்களுக்குப் பின் அக்கதைகள் அவனோடு வேலை செய்கிறவர்களிடமிருந்தும் வரத் துவங்கியபோது அவனால் முன்பு போல் இயல்பாக இருக்க முடியவில்லை. தன்னோடு அவள் ஏற்படுத்தி வைத்திருக்கும் தூரத்தையும் இந்தக் கதைகளையும் சேர்த்துப் பார்த்த போது சந்தேகத்தின் கோரமான பிம்பம் அவனை சதாவும் சுரண்டிக் கொண்டிருந்தது. உறங்க முடியாது சிரமப்பட்டான். இரவுகளில் உறக்கம் தப்ப, நாய்களைக் கையாளும் போது கவனம் சிதறியது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நாய்களின் பல் தடம் பட்டபோது பழனி பதட்டமாகிப் போனான்.


”ஏய், கண்னுல எதும் பிரச்சனையாடா? நீ கயிறு வலிக்கிறதே பழைய மாதிரி இல்ல…” சேகர் இயல்பாக மறுப்பது போல்

“அதெல்லாம் ஒன்னியும் இல்ல பழனி, ரெண்டு நா மிந்தி கைல சின்னதா சுளுக்கு அதான் லெஃப்ட் கையால வலிக்க முடியல… சரியாயிடும் வுடு..”

என சமாளித்தான். எத்தனை நாய்களைப் பிடிக்கிறோம்? எந்த ஏரியாவிற்குப் போகிறோமென்கிற கவனமில்லாமல் மனம் சதாவும் வேட்டை நாய் போல் மல்லிகாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது. வறண்டு உலர்ந்த உடலில் சோர்வை மீறி தகிப்பே பெருகி வழிந்தது. உடலிலிருந்த காயங்களைப் பற்றின கவலையுமில்லை. நாய்களுக்காக சுருக்குப் போடும் போது எப்போதும் கவனமாக இருப்பான். கையில் ஒரு முனை இருக்கும். இன்னொரு முனை மிக தளர்வாக இருந்தாலும் நாயின் கழுத்தில் விழுந்ததும் பிடி நகராதபடி இருக்கும். ஆனால் காலையிலிருந்தே அவன் சமநிலையில் இல்லாததால் எல்லாம் சிதறலாகவே இருந்தன.


உடல்நிலையைக் காரணம் காட்டி விடுமுறையே எடுக்காத சேகருக்கு இரண்டு நாள் காய்ச்சல் என்கிற விசயம் அவனோடு வேலை செய்த எல்லோருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது. மல்லிகாவும் அவனோடேயே இருந்தாள். அத்தனை நாட்களும் அவனுக்கென சேமித்திருந்த பரிவு நேசம் அவ்வளவும் அவளுள்ளிருந்து கசிந்தது. அவனுக்குத் தேவையெல்லாம் இந்த அன்பும் அருகாமையும் தான் என்பதை மற்றெல்லோரையும் விட அவள் மிக நன்றாய்ப் புரிந்திருந்தாள். கொதித்துக் கொண்டிருந்த காய்ச்சலையும் மீறி அவளை சந்தேகப்பட்டுவிட்டதற்காக சேகர் நொறுங்கிப் போனான். யாரோ சிலரின் வார்த்தைகள் மீது இருந்த நம்பிக்கை ஏன் நாம் நேசித்தவளின் மேல் இல்லை? எல்லாவற்றையும் பேசிக் கொட்டித் தீர்த்துவிட வேண்டும். அவள் மடியில் புரண்டு அழவேண்டுமென நினைக்கும் போது இதென்ன? எல்லாம் அவனுக்குள் பேச முடிகிறது ஆனால் பேச முடியாதபடி நா வறட்சி. தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தான். இன்னொரு புறம் வாயின் இரண்டு ஓரங்களின் வழியாகவும் கோழை வழியத் துவங்கியது.


“இன்னாதிது வாயெல்லாம் எச்சியா வருது…. வெறும் ஜொரமாட்டம் தெரியல… வா நாம எதுக்கும் ப்ளட் டெஸ்ட் எட்த்திடலாம்….”

மல்லிகாவுக்கு நிஜமானக் காரணம் தெரிந்தால் பயந்துவிடுவாளென துணியால் வாயைத் துடைத்துக் கொண்டு

“அதெல்லாம் ஒன்னியும் வோணாம். ரெண்டு நாள்ல சரியாப் போகும்..” என சிரித்தபடி சொன்னான்.

காய்ச்சல் குணமாகி அவன் வேலைக்கு வந்த போது மல்லிகா முழுதாய் அவனுக்கானவளாய் இருந்தாள். சேகருக்குத்தான் இப்பொழுது அந்த அன்பை எதிர்க்கொள்ள அச்சமாய் இருந்தது. எல்லோரிடமிருந்தும் விலகியவனுக்கு கண்கள் நிலை கொள்ளாது அலைந்தன. தேகம் வறண்டு ரோகியைப் போலிருந்தான். அவனுக்குள்ளிருந்த நிதானம் கொஞ்சம் கொஞ்மாய் மறைந்து எல்லாவற்றுக்கும் சின்னதொரு உறுமலோடு அவன் பேசுவதை அவள் தான் முதலில் கவனித்தாள்.

”என்னாச்சு உனக்கு? கண்ணு ஒரு எடத்துல இருக்க மாட்டேங்குது. தல நிக்க மாட்டேங்குது. கஞ்சா எதுனா அடிக்கிறியா?”

அவள் அச்சத்தோடு கேட்டதற்கு சேகர் வெறுமனே சிரிக்க மட்டுமே செய்தான். உடலுக்குள் அதீதமான மிருக உணர்ச்சி ஒரு பக்கம் பெருக அதை யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் தவித்தான். அவளுக்கு இந்த விசயம் தெரிந்தால் தன்னை முற்றிலுமாக தவிர்த்துவிடுவாளோ என அச்சம்.


குளிர்காலத்தின் துவக்கத்தில் மொத்த மாநகரமும் நீண்ட உறக்கத்தை நாடியிருக்க நாய்கள் ` தங்களின் இணைகளைத் தேடி எல்லாத் தெருக்களிலும் பசியின் வெறியோடு சுற்றிக் கொண்டிருந்தன. சேகருக்கு நாய்களைப் பார்க்கும் போதெல்லாம் கண்களில் ஒருவித ரெளத்ரம் பொங்கி அடங்கியது. இதற்கு முன் சாதாரணமாக செய்த வேலையை மூர்க்கத்துடன் செய்து கொண்டிருந்தான். இந்த மாநகரிலிருக்கும் மொத்த நாய்களையும் வேட்டையாடிவிடும் மூர்க்கம் அவனுக்குள். உடன் வந்திருந்த பழனிக்கு களைத்துப் போக, “போதும் மச்சி, இப்பவே எட்டு உருப்படியாச்சி. இன்னும் எம்மா நேரம் இங்கயே சுத்தினு இருக்க? போலாம்.” மதிய சாப்பாட்டிற்கான நேரமாகிவிட்டதை அவனோடு சேர்ந்து வேன் டிரவைரும் அடிக்கொரு தரம் நினைவுபடுத்திக் கொண்டிருந்தான். சேகர் வெறுமனே சரியெனத் தலையாட்டினான். இரைச்சலான சாலையில் மிக மெதுவாய் இவர்களை நோக்கி வரும்போதே சேகர் மயங்கி விழுந்தான்.

கண்களை முழுமையாய் விரித்துப் பார்க்க முடியவில்லை. சில நாட்களாக எதையுமே உட்கொள்ள முடியாமல் போய் அவன் உடல் சோர்ந்து மெலிந்திருந்தது. மங்கலான வெளிச்சம் வந்த இந்த அறை புதிதாய்த் தெரிய மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொள்ளப் பார்த்தான். ஒரு கையில் டிரிப் ஏறிக்கொண்டிருந்தது. காட்டமான மருந்துவாசனை ராயப்பேட்டை மருத்துவமனை என்பதை உணர்த்த சுற்றிலும் கண்களைத் துலாவி மல்லிகாவைத் தேடினான். இறப்பிற்கு முன் தனது நேசத்திற்குரிய எசமானனைத் தேடும் நாய்க்குட்டி போல் அவன் கண்கள் அவளைத் தேடிக் கொண்டிருந்தன. சில அடிகள் தள்ளி கதவுக்குப் பின்னால் அவள் உட்கார்ந்திருந்தாள். சத்தம் போட்டுக் கூப்பிட முயன்றான். தொண்டை ஒத்துழைக்கவில்லை. கட்டிலில் தட்டினான். மல்லிகா வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரப் பார்த்தாள், வாசலிலிருந்த நர்ஸ் தடுத்து நிறுத்தினாள்.


“எங்க போறீங்க? அவரு ரேபிஸ் பேஷண்ட்ம்மா… அதுவும் இது ரொம்ப சீரியஸ் ஸ்டேஜ், இப்போ பக்கத்துல யாரும் போகக் கூடாது… இவ்ளோ நாளா அவரு உங்க கிட்ட சொல்லாம தாக்குப் புடிச்சதே பெரிய விசயம்…”

“கதவ மட்டுமாச்சும் தொறங்க… நான் ரெண்டு வார்த்த பேசனும்…”

“ஏய் லூசாம்மா நீ? அவரால பேச முடியாது…”

“இல்ல அவரு பேச வேணாம்… நான் பேசறத அவர் கேட்டா போதும்… தயவு செஞ்சு விடுங்கம்மா… நான் இந்த கதவுக்குப் பக்கத்துலயே நின்னுக்கறேன்…”


மன்றாடியவளைக் காணச் சகிக்காமல் கதவை மட்டும் திறந்துவிட்டு அவளின் ஒரு கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நகரவிடாமல் நர்ஸும் அருகிலேயே நின்றாள். அவளோடு சேர்ந்து வாழ நினைத்திருந்த அவனின் கனவுகள் அவ்வளவும் சிதறி அந்த அறைக்குள் அவர்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டிருந்தது. வெறுமனே லேசாக சிரித்தான். வாயிலிருந்து மெல்லிசாய் இப்பொழுது கோழை வழிந்தது. நீர்மையே இல்லாத உடலென அவனுக்குள் இன்னும் அவள் மீதான காதல் மட்டும் மிச்சமிருந்தது.


“உன் ஒருத்தனுக்காகத்தான இவ்ளோ நாளும் இருந்தேன்…. தனியா விட்டுட்டுப் போறியே மாமா…”

வாழ்வின் மீதான தீராக் காதலோடு செய்ய ஏதுமற்றவனாய் இவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் ரொம்பவும் இடுங்கிப் போனது.

“வுடுங்க நர்சம்மா.. நானும் சாவறேன்.. இருந்து என்ன ஆவப் போவுது… வுடுங்க…”


கைகளை உருவித் திமிறியவளை நர்சால் கட்டுப்படுத்த முடியாமல் உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டாள். மல்லிகாவின் குரல் அலறலாக வெடிக்க அவன் முகம் ரொம்பவும் வறண்டது. அழ முயற்சித்திருக்க வேண்டும். இடது கண்ணிலிருந்து மட்டும் சின்ன சின்னதாய் சில துளிகள் கண்ணீர் கசிந்தது. கடைசித் துளி நீர்மையையும் இழந்து கொண்டிருக்கும் அவனுக்கு முன்னால் அடக்க முடியாமல் அழுது அரற்றினாள். நர்ஸைத் தள்ளிவிட்டு அவனோடே போய்விடலாமென ஓடியவளை அந்த வளாகத்திலிருந்த சிலர் வந்து தூக்கிக் கொண்டு போயினர். தனக்கும் சேர்த்து அலறும் அவளை இனி ஒருபோதும் பார்க்கப் போவதில்லை என்கிற ஏக்கத்தோடு கண்களை மூடினான். அந்த அறை முழுக்க மல்லிகாவின் ஸ்பரிசம் அவனோடு நிறைந்திருந்தது.

296 views

Recent Posts

See All

Fake

bottom of page